பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

227


தோன்றிற்று என்று பொருள் கொள்ள முடியவில்லை. காரணம், 'முகிழ்த்தன' என்ற சொல் தன்வினைச் சொல்லே பிறவினை அன்று. ஆதலால் உலகம் இறைவனுடைய தண்ணளியின் நிழலில் தானே தோன்றிற்று என்று கொள்ளுதலே சிறப்புடைய பொருளாகும். உலகம், தானே தோன்றிற்று என்ற லெனினியத்தோடு இந்தக் கருத்து இசைந்திருக்கிறது. தமிழ் இலக்கண நூலுள் ஒன்றாகிய புறப்பொருள் வெண்பா மாலையும் இந்த அடிப்படையிலேயே உலகத் தோற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. அதாவது:

"வையகம் போர்த்த வயங்கொளிநீர்-கையகலக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வானொடு
முன்தோன்றி மூத்த குடி”

என்பது பாடல். இந்தப் பாடல் மூலம், உலகம் நீர்ப்பரப்பாக முதலில் இருந்தது. பின்பு பரிணாம வளர்ச்சியில் கல் தோன்றிற்று. கல் கரைந்தும் உடைந்தும் மண் தோன்றுதற்கு முன்பு தமிழினம் தோன்றிற்று என்று விளங்குகிறது. 'கல் தோன்றி மண்தோன்றி' என்ற சொற்களின் மூலம் தானே தோன்றிற்று என்பதே பெறப்படுகிறது. 'தோன்றுதல்' என்ற சொல்லும் தன்வினைச் சொல்லேயாம்.

அப்பரடிகள் "இறைவன் உலகத்தைப் படைத்தான்” என்று ஒரேவழி கூறியிருந்தாலும், மிகுதியாக இறைவனே உலகம் என்ற கருத்தும், உலகமே இறைவன் என்ற கருத்தும் தான் அப்பரடிகள் திருமுறையில் அதிகம் பயிலுகிறது. இறைவன் படைக்கப்பட்டவன் அல்லன். ஆதலால், உலகமே இறைவன் என்ற கருத்தால் உலகம் படைக்கப்பட்டதில்லை என்பதும் பெறப்படுகிறது. "எல்லா உலகமும் ஆனான்" என்றும், "அனைத்துலகும் ஆனானை" என்றும், "உலகமெல்லாம் ஆயவனை" என்றும், "உலகானானை" என்றும் அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார்கள். சிவநெறியில் சிவலிங்க வழிபாடே தொன்மை வழிபாடு. சிவலிங்க வழிபாட்டின் பரிணாம