பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

229


இருக்க முடியாது. மனிதனை விட மேம்பட்டதொன்றாகத் தான் இருக்க வேண்டும். அது கடவுளையன்றி வேறுயாதாக இருத்தல் கூடும்? என்று கூறுகிறார்.

பகுத்தறிவு படைத்த மனிதனைவிட இயற்கை ஒரு வகையில் ஒழுங்காகவே இயங்குகிறது. அதீதமாகச் சில சந்தர்ப்பங்களில் இயற்கையின் சீற்றத்தால் துன்பங்கள் விளையினும், பொதுவாக இயற்கை அழகாக இருக்கிறது. ஆக்கப்பாடுடையதாக இருக்கிறது; உயிரினங்கள் பலவற்றிற்கும் வாழ்வளிக்கிறது. இயற்கையின் எழில் தோற்றத்திலும் அதன் விளைவுகளை நுகர்தலிலும் உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்காட்டிகள் கடிகாரங்கள் முதலியன வைத்தறியாத இயற்கையுலகம் காலந் தவறாது செயற்படுகிறது! கதிரொளி தெரிகிறது! மரங்கள் பூக்கின்றன; காய்க்கின்றன; கனி தருகின்றன! இவை நிகழ்வதில் ஒரு குறிப்பிட்ட கால அமைப்பு முறையிருக்கிறது. இந்த முறைகளும் மாறுபடவில்லை. காலந்தாழ்த்தி அலுவல்கள் செய்யும். அதுவும் கடிகாரம் கட்டிய மனிதனைப் பார்க்கிறோம். ஆனால் ஞாலத்து நிகழ்வுகளில் காலத் தாழ்ச்சியில்லை. இத்தகைய வியத்தகு முறைகளுக்கு எது அடிப்படை? இயற்கையின் இயல்பா? உலகத்தின் உள்ளீடமா? அல்லது உலகத்திற்கு உயிர்ப்புத் தன்மை யுண்டா? அல்லது மனிதன் இயக்குகின்றானா? அல்லது கடவுள் இயக்குகின்றானா என்பதைத் தொடர்ந்து ஆராய்வோம்.

4

நம்முடைய ஆய்வில் மிகவும் சிக்கல் நிறைந்த பொருள் ஆன்மா. அதாவது உயிரைப் பற்றியதாகும். லெனினியம் உயிர் சம்பந்தப்பட்ட செய்தியில் நம்முடைய தமிழ் மரபோடு முரணி நிற்கிறது. உடலுக்கு அப்பாற்பட்ட உயிர் ஒன்று இல்லையென்பது லெனினியத்தின் கோட்பாடு. ஆனால் தமிழ்மரபு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் என்ற தனிப்