பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

251


அண்மையில் நான் நேருஜி அவர்களின் சொற்பொழிவு ஒன்றைப் படித்தேன்; அதைத் திரும்பத் திரும்பப் படித்து அனுபவித்தேன்.

"கருவிலேயே கிழடு தட்டிப் போனவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; கருவிலேயே கிழடு தட்டியவர்கள் என்றால் சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக வழவழ கொழ கொழ என்று இருப்பதுதான்; அத்தகையவர்கள் தீ வைப்பவர்களைக் காட்டிலும் கொடியவர்கள்; வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல இளைஞர்கள் இருக்க வேண்டும்” என்ற நேருஜி அவர்களின் அறிவுரை சிந்தனைக்குரியது - வருங்கால பாரதத்தை உருவாக்கப் போகிற இளைஞர்களுக்கு மிகவும் இன்றியமையாதது.

இன்றையப் பள்ளிகளே, நாளைய பாரதத்தின் அடித்தளம்; ஆசிரியர்களே மாணவர்களை உருவாக்கும் சிற்பிகள், மாணவர்களே வருங்காலத் தலைவர்கள். ஒவ்வொரு மாணவரின் குறை நிறைகளையும் பண்பியல்களையும் கொண்ட 'சாதகங்கள்' ஆசிரியர்களிடம் இருக்க வேண்டும். சமுதாயம் வளர்வதற்குரிய கல்வியை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் சுறுசுறுப்பாக ஓடியாடி விளையாட வேண்டும்; அவ்வப்போது செய்ய வேண்டிய வேலைகளைக் காலத்தோடு ஒழுங்காகச் செய்ய வேண்டும். இன்று எல்லாருக்கும் எல்லாக் கதவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. யாரும் எந்த உத்தியோகத்திற்கும் வரலாம். எனவே இளைஞர்கள் எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும். அவர்கள் கெட்டப் பழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது; எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுங்கள். உங்கள் கால் கைகளுக்கு வேலை கொடுப்பது போல மூளைக்கும் வேலை கொடுங்கள்.