பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒன்றுதான் பண்பாடு. பண்பாடற்ற நிலையில் மக்கள் வாழும் உலகு இருப்பதைவிட அழிவதே நல்லது என்பது திருவள்ளுவர் கருத்து.

"பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்"

என்பது திருக்குறள். இங்ஙணம் தமிழிலக்கியங்கள், பரந்து பட்ட-விரிந்த நோக்கத்தையும், ஒப்புரவுப் பண்பையும் வளர்த்து மக்களினத்தை அமைதியும் இன்பமும் நிறைந்தபண்பாட்டிற் சிறந்த பெருவாழ்வு வாழத் துணை செய்து நிற்கின்றன.

இலக்கியமும், கடவுள் நெறியும்

தமிழ்ப் பெருமக்களது அறிவு, உணர்ச்சி, தெளிவு முதலியன குறைவறப் பொருந்திய வாழ்க்கையின் அனுபவத்தினின்று எழுந்தது கடவுள் கொள்கை. தமிழ்க் குடியினர், மிகப் பழங்காலந்தொட்டே, நெஞ்சந் தோய்ந்த சமய வாழ்க்கை வாழ்ந்து, கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். தாம் கண்ட கலைகள் அனைத்தையும் (இசை, கூத்து, ஒவியம், சிற்பம், இலக்கியம்) கடவுள் நெறியின் சார்பில் நின்று, வளர்த்து, வளம் படுத்தி, இறையருட் பணிக்கே பயன் படுத்தினர். தமிழிலக்கியங்கள் அனைத்திலும், கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் உயிர் நிலையாக அமைந்து கிடக்கின்றன. பழங்காலத் தமிழ்ப் பெருமக்கள் நகரமனைய பெருங்கோயில்களை மூவா முதற் பொருளுக்கு எடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய இற்றைக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, கடல் கொண்ட தென்குமரி நாட்டிலே நகர மனைய திருக்கோயில் இருந்ததாகத் தெரிகிறது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பானைக் 'காரி கிழார்' என்னும் தமிழ்ப் புலவர் பாடுகின்றார். தமது பாடலின் மூலம்,