பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

69


தொகுப்புரை

கல்விச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் நிறையச் சிந்தித்திருக்கின்றோம். நம்முள் கல்வித் துறையில் செய்ய வேண்டிய பணிகள் மலைபோல் குவித்துள்ளன. தரமான கல்வி வசதிகள், கல்விக்குள்ள நிறைந்த பயிற்சி வசதிகளைச் செய்துமுடிக்க நமது தமிழ் நாட்டின் வரவு செலவுத் திட்டத் தொகை முழுவதையும் ஒதுக்கினாலும் போதாது என்ற நிலையே வரும். ஆயினும், நாம் அடுத்த தலைமுறைக்குச் செய்யவேண்டிய ஒரே ஒரு தலையாய பணி சிறந்த கல்வியைத் தருதலேயாகும். இந்தப் பணியை நிறைவேற்ற, “பள்ளித்தல மனைத்தும் கோயில் செய்குவோம்” என்ற பாரதியின் வாக்கினை நினைவிற்கொண்டு ஊர் தோறும் பள்ளிகளை வளர்க்க நிதியளிக்க வேண்டும். அன்று, பாரதி பாடியது எப்படியோ? இன்றைய சூழ்நிலையில் பாரதியின் வாக்கை பொன்னெனப் போற்றி - எழுத்தறிவு நல்கும் போரில் ஈடுபடுவோமாக நல்ல இலட்சிய நோக்குடைய ஆசிரியர்களைக் கண்டு, நாட்டை அவர் தம் வழியில் இயக்குவோமாக! எதிர்வரும் தலைமுறையினரை அறிவும் ஆற்றலும் விழுமிய குறிக்கோளும் உடையவர்களாக உருவாக்கி நாட்டிற்கு அணியென விளங்கச் செய்ய, நம்மை அர்ப்பணிப்போமாக! உறுதிகொள்வோமாக!

இனிய அன்புடையீர்! நமது தலைமுறையில் வாழும் சிறந்த அறிஞராகிய துணைவேந்தர் டாக்டர் ச.முத்துக்குமரன் அவர்கள் தலைமையில் முதல் துணைவேந்தர் முனைவர் பி. சு. மணிசுந்தரம் அறக்கட்டளையின் சார்பில் கல்வியைப் பற்றிய சிந்தனை செய்ய, பேச, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி! கல்வியியலில் துறைப் பேராசிரியர் முனைவர் - எஸ். புருஷோத்தமன் அவர்களுக்கும் நன்றி!

நமது இலட்சியம் உயர்ந்ததாக இருக்கட்டும்! -