பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒருவர் மடத்தில் தம்பிரான் நிலையிலிருக்கும் பொழுதுதான் திருமடத்தின் அங்கீகாரம் பெற்ற உறுப்பினராகிறார். அது முதல் திருமடத்தின் சொத்தாகவும் பிரிக்கப்பட முடியாதவராகவும் ஆகிறார். அவருக்குத் திருமடத்தில் உரிமைகள் உண்டு. திருமடங்களில் பழங்கால தம்பிரான்களுக்கு உரிமைகளும் கடமைகளும் இருந்தன. இன்று நடைமுறையில் இல்லை. எல்லா உரிமைகளும் பெற்ற இந்திய ஜனங்களின் உரிமைகள் போலவே இந்த உரிமைகள் ஆயிற்று! அதற்கும் மேலே பக்குவம் பெற்று, முறையே பெறுபவை-நிர்வாண தீட்சை, ஆசாரியாபிஷேகம் முதலியன.

ரெங்கநாதன் யாத்திரைக் காஷாயம் வாங்கிக் கொண்ட செய்தி மயிலாடுதுறைக்குப் போய்ச்சேர்ந்தது. அப்படியே நடுத்திட்டில் இருந்த பெற்றோருக்கும் செய்தி கிடைத்துவிட்டது. தாய்க்குத் தாங்கமுடியாத துயரம். உடனே தருமபுரத்துக்கு வந்து சேர்ந்தார்கள் தாய், தந்தை, தமையனார் ஆகியோர். அறைக் கதவு தட்டப்படுகிறது. நள்ளிரவு மணி பன்னிரண்டு. அவர்கள் வந்த நோக்கம் நம்மை மீட்டுக் கொண்டு போய்விடுவது என்பது. கந்தசாமிப் பரதேசி எடுத்துக் கூறிய சமாதானம் எடுபடவில்லை . அவர்களின் அழுகைச் சத்தம் கேட்டு அடுத்தடுத்த அறையினர் வேறு வந்துவிட்டனர். ஒருவாறாகச் சமாளித்துக் காலையில் மகாசந்நிதானம் அவர்களிடம் தெரிவித்துவிட்டு வந்துவிடுவதாக உறுதி (உறுதியில்லாத உறுதி) கூறினோம். அவர்கள் போய்விட்டனர்!

மறுநாள் காலை ஏழு மணி, மகாசந்நிதானம் அவர்கள் நந்தவனத்தில் தனித்திருக்கும் நேரம். அந்த நேரத்தில் - அழைப்பு வந்தது. 'கந்தசாமிப் பரதேசி' சென்று கண்டு கொண்டார். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். மகாசந்நி. தானம் அவர்களிடம் நடந்தவற்றை இரவு காவற்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கந்தசாமிப் பரதேசியும் நடந்த வற்றைக் கூறினார்.