பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

97


"என்ன முடிவு" மகாசந்நிதானம் அவர்களின் கேள்வி?

"எடுத்த முடிவு முடிவுதான்! இனி யோசிப்பதில் பயன்?

மகாசந்நிதானம் அவர்கள் உடனே உத்தரவு செய்தார்கள்.

"பழைய மரபுப்படி நீ யாத்திரை போய் வா! தெற்குப் பக்கம் போ! குமரி வரையில் சென்று தலங்களை வழிபட்டுவா! உனக்கும் நல்லது.... உன் பெற்றோருக்கும் பழகிப் போய்விடும்!” என்று பணித்தார்கள்.

அன்றே கந்தசாமிப் பரதேசியின் யாத்திரை தொடங்கியது. உடன் அலுவலகக் கண்காணிப்பாளர் அ. கல்யாண சுந்தரதேசிகரையும் அனுப்பி வைத்தார்கள். கல்யாண சுந்தர தேசிகர் நல்ல அறிஞர். சாதுரியமானவர். ஆனால், மகாசந்நிதானம் அவர்களைத் தவிர, வேறு எவர் சொல்லையும் கேட்க மாட்டார்கள். தன் பக்கத்தில் தராசு வைத்தே பேசுவார்... பழகுவார். குட்டித் தம்பிரானாக இருந்தால்கூட அவரிடம் இரண்டாம் இடம்தான்!

கந்தசாமிப் பரதேசி, யாத்திரையாக ரயில் வழி மதுரை வந்து சேர்ந்தார். மதுரையில் தருமை ஆதீனம் மடத்தில் தங்கல். மதுரை வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கேயே தங்கல். மறுநாள் திருப்புரங்குன்றம் சென்றார். திருப்பரங்குன்றத்துக்குத் தேசிகர் உடன் வரவில்லை.

கந்தசாமிப் பரதேசி மட்டும் பயணம். திருப்பரங்குன்றத்தில் சரவணப் பொய்கையில் தீர்த்தமாடிவிட்டுக் கரையில் துண்டு விரித்து உட்கார்ந்துகொண்டு ஜெபம் செய்தார். தொடக்கக் காலத்தில் பணி நேரங்களில் கூட ஜெபம் செய்வார். அதாவது, திருவைந்தெழுத்து எண்ணுதலாகும். கண்களை மூடி ஜெபம் செய்து கொண்டிருந்தார்.