பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வந்தவுடன் பணிவிடை நடராசனை அழைத்து வரச் செய்து ஆத்திரம் தீரத்திட்டினோம்.

"குட்டித் தம்பிரான்கள் பணிவிடை செய்யக் கடமைப் பட்டவர்கள். குட்டித் தம்பிரான்களை அவர்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது எப்படி நியாயம்? குரு-சிஷ்ய உறவில் ஊதியம் வாங்கும் ஊழியர்கள் குறுக்கீடு செய்வது என்ன நியாயம்?” என்று சத்தம் போட்டோம்! "இனி நமது தொண்டு வாழ்க்கையில் குறுக்கே நின்றால் அப்புறம் நடப்பது பற்றிக் கவனமாக இருந்து கொள்!” என்று எச்சரித்து அனுப்பி வைத்தோம்.

பணிவிடை நடராசன் நடந்தவற்றை அப்படியே சென்று சொல்லியிருக்கிறான். நமது கருத்துப்படியே, மகாசந்நிதானம் அவர்களிடமிருந்து கந்தசாமிக் குட்டித் தம்பிரான் (இதுதான் தருமபுரத்தில் இருந்தபோது பெயர்) எண்ணம் போல் நடந்து ஒத்துழைக்கும்படி நடராசனுக்கு உத்தரவு கிடைத்தது. அது முதல் குன்றக்குடிக்குப் பயணம் புறப்படும் நேரம் வரையில் மகாசந்நிதானம் அவர்களுக்குப் பணிவிடை செய்ததில் ஓய்வு எடுத்ததில்லை. தவறியதில்லை.

இந்த உணர்வு எப்படி வந்தது? குமரகுருபரர் இயற்றிய பண்டார மும்மணிக் கோவை பாராயணம் தந்தருளிய பரிசு, பாராயணம் மட்டுமன்று. பண்டார மும்மணிக் கோவையின் ஞானாசிரியராகிய மாசிலாமணி தேசிகருடைய குரு மூர்த்தத்தில் நாமும் இன்றைய தருமபுரம் திருவருள் திரு. மகாசந்நிதானம் அவர்களும் வியாழக்கிழமைதோறும் பண்டார மும்மணிக் கோவை ஓதி, வழிபாடு செய்யும் பழக்கம் இருந்தது. அதன் காரணமாக குருபக்தி வளர்ந்தது.. இந்தக் குருபக்தியின் காரணமாக அடக்கம் அணி கலனாயிற்று. கல்வியும் ஞானமும் கிடைத்தன. தொண்டு நெறியில் ஆர்வம் எழுந்தது.