பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தம்பிரான் அவரை அழைத்துக் கலந்து பேசினார். "வகுப்புக் கென்று இப்போது தனி ஊதியம் தர இயலாது. தாங்கள் தொண்டாகத்தான் கருதிச் செய்யவேண்டும். பின்னே மகாசந்நிதானத்திடம் விண்ணப்பித்து ஊதியம் வழங்க முயல் கிறேன்” என்று கந்தசாமித் தம்பிரான் கூறினார். சட்டநாத தேசிகர் கடமையுணர்வுடன் ஒப்புக்கொண்டார். மாலை நேரத்தில் திருமுறை வகுப்பு நடத்துவதென்று திட்டமிடப் பெற்றது. இருபது முதல் ஐம்பது வரை திருமுறை வகுப்புக்கு மாணவ மாணவியர் சேர்ப்பதென்பது திட்டம். மாணவ மாணவியரை எப்படிச் சேர்ப்பது? தாமே ஆர்வத்துடன் படிக்க முன்வருவார்களா? அப்படியே வந்தாலும் சராசரித் தகுதியுடைய குடும்பத்து மாணவ மாணவியர் பங்கேற்பார்களா என்னும் கேள்விகள் எழுந்தன.

அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் இலவசக் கல்வி இல்லை! கட்டணம் இருந்தது. திருமுறை வகுப்பில் சேரும் மாணவ மாணவியருக்குப் பள்ளிக் கட்டணம் திருக்கோயில் செலுத்தும், சீருடை வழங்கும், புத்தகங்கள் வாங்கித் தரும் என்று திட்டம் தீட்டப்பெற்று மகாசந்நிதானத்திடம் ஆணை பெறப்பட்டது. நல்ல வரவேற்பு! போட்டி! 200-க்கு மேல் விண்ணப்பங்கள் வந்தன. விண்ணப்பம் அனுப்பியவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். பள்ளிக் கட்டணம் போக சீருடை, புத்தகங்கள் வகைக்கு நன்கொடை வசூலிக்கப் பெற்றது. நன்கொடை கொடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் வைத்தீஸ்வரன் கோயில் நெல் வியாபாரி சீனிவாச ரெட்டி யார். இவர் மிகவும் நல்லவர்; எப்போதும் மலர்ந்த முகத் தினர். இவர் ரூ 1000/-ம் கொடுத்ததுடன் 25 சீருடைகளும் தைத்துக் கொடுத்தார். மற்றொருவர் சீகாழியில் இருந்த குத்தகைதாரர் உருத்திராபதி படையாச்சி. இவர் எதிலும் தாராளமனப்பான்மையுடையவர். இவர் மீதிச் சீருடைகள் வாங்கிக் கொடுத்ததுடன் வகுப்பு நடைபெறும் நாளன்று விநியோகப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.