பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



குன்றக்குடி மகாசந்நிதானம், சண்முகத் தம்பிரானுக்குப் பட்டம் கட்ட விரும்பவில்லை. வாகீசம் பிள்ளைக்குக் காவி கொடுத்து, அவரையே தனது வாரிசாகமடாதிபதியாக்க விரும்பினார். இந்தக் கருத்து உருவாக்கத்தில் பங்குபெற்றிருந்தவர்-குன்றக்குடித் திருக்கோயில் ஸ்தானிகம் து.அ. அண்ணாசாமி குருக்கள். இவர் துடிப்பு மிக்க இளைஞராக இருந்தபோது வாகீசம் பிள்ளையோடு பழக்கம்; நல்ல தோற்றமுடையவர்; புத்திசாலி. து.அ. அண்ணாசாமி குருக்கள், வாராப்பூர் சின்னக்கண்ணு சேர்வை, சிதம்பரம் பிள்ளை, அம்மாளம்மாள், பழனியாண்டி சேர்வை ஆகியோர் அடங்கிய குழு, வட்டிக்கடை முதலாளியின் கைக்கூலிகளை எதிர்த்து வாகீசம் பிள்ளையை மடாதிபதியாக்க முயற்சி செய்தது. இத்தனை பேரும் வெளிப்படையாக வட்டிக்கடை முதலாளியை எதிர்க்க வில்லை. சின்னக்கண்ணு சேர்வை மடத்துக் காவற்காரர். ஒரு காலகட்டத்தில், முதலாளியின் ஆட்கள் மடத்துக்குள் துழைய முயன்ற போது அடித்து விரட்டிக் காயம்பட்டவர். பழனியாண்டி சேர்வை வாகீசம் பிள்ளையின் நண்பர். வாகீசம் பிள்ளையுடன் ஆத்தங்குடியில் இருந்தவர். அம்மாளம்மாள் காவல் துறையை "அசந்து" நிற்கும்படி செய்தவர்.

திட்டம் விரிவாயிற்று. குன்றக்குடி மடத்தின் கொல்லைப் புறத்தில் மடத்தையும், அண்ணாசாமி குருக்கள் வீட்டையும் பிரிப்பது ஒரு சுவர். அந்தச் சுவர் வழியாக இரவு நேரத்தில் வாகீசம் பிள்ளையை மடத்துக்குள் இறக்கிவிடுவது; நாவிதரையும் இறக்கிவிடுவது. யாருக்கும் தெரிவிக்காமல் வாகீசம் பிள்ளைக்கு இரவோடிரவாகப் பட்டம் கட்டி விடுவது என்பது முடிவு. திட்டமிட்டபடி எல்லாம் நிறைவேறின.

இப்படிப் பல போராட்டங்களுக்கிடையில் வந்த (வாகீசம்பிள்ளை) பொன்னம்பலத் தேசிகர், மடத்து