பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



23

ருள்நெறித் திருக்கூட்டம் 1952-ல் தொடங்கி வெகு வேகமாக வளர்ந்தது. திருவிழாக் கூட்டங்களில் எல்லாம், ஊர்வலங்களும் தெருமுனைப் பிரசாரங்களும் செய்யப் பெற்றன. தெருமுனைப் பிரசாரங்களில் தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் பங்கேற்றுக் கொண்டது குறிப்பிடத் தக்கது. கும்பகோணம் மகாமகத்தில் (1956) பிரசாரம் நடந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது மகாமகம்.

அடுத்து மயிலாடுதுறையில் நடந்த கடைமுக முழுக்கின்போது நடந்த பிரசாரம் முதன்மையானது. பல மாவட்டங்களிலிருந்தும் அன்பர்கள், ஊழியர்கள் வந்திருந்தனர். மாநாடு போல் கூடியிருந்தனர். இந்த விழாவுக்கு குன்றக்குடி ஆதீனகர்த்தராகிய நாம் வருவதறிந்த அந்தப் பகுதியில் உள்ள வேளாளர் பெருங்குடி மக்கள் நமக்கு வரவேற்புக்கும் மகேசுவர பூஜைக்கும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வேளாளர் பெருங்குடி மரபினர் சிவநெறியைச் சார்ந்து ஒழுகும் சிறப்பினர் என்பதால் 'சைவர்கள்' என்றும் அழைக்கப்படுவர். சமயநெறி சார்ந்த பெயர் காலப்போக்கில் ஜாதிப் பெயராகி விட்டது. அந்தோ பரிதாபம்! திருஞான சம்பந்தர் திருமுறையில் ஆக்கூர் தேவாரத்தில், வேளாளர் குல மரபினர் பாராட்டப்பெற்றுள்ளனர்.

"வாளார் கண் செந்துவர் வாய்
மாமலையான் தன்மடந்தை
தோளாகம் பாகமாப்
புல்கினான் தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள்
வள்ளன்மையால் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில்
தான்தோன்றி மாடமே!”


என்பது அத்திருப்பாடல்.