பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

179



மகேசுவரபூஜை என்பது சைவ ஆதீனத் திருமடங்களில் அடியார்களுக்குக் குருமுதல்வரையும் இறைவனையும் எண்ணி உணவளிப்பது. உண்பதற்கு முன் பூஜையும் நடைபெறும். வைதீக மடங்களில், 'பிஷை' என்று சொல்வர். மயிலாடுதுரையில் மகேசுவரபூஜை ஏற்பாட்டில் நாம் அமர்ந்துவிட்டோம். பூசனை முதலிய சடங்குகள் முடிந்தன. உண்பதற்கு முன் பந்தியில் சுற்றி ஒரு கண்ணோட்டம். பந்தியில் அறிஞர்கள், தொண்டர்களைக் காணோம். கை. கனகசபை பிள்ளையை அழைத்து நாம் விவரம் கேட்டதில் "அவர்கள் சைவர்கள் அல்லர், ஆதலால் தனிப்பந்தியில் சாப்பிடுகிறார்கள்” என்றார்.

ஜாதி வேற்றுமைகளை அகற்றுவது லட்சியம். ஜாதி வேற்றுமைகளாலேயே சமுதாயம் அழிந்துவருகிறது. நோயால் உருக்குலைந்த உடல்போல் ஆகிவருகிறது. உண்பதிலும் உறவு கொண்டாடுவதிலும் ஜாதி வேற்றுமைகள் ஏன்? இந்த ஜாதி முறைகள் எப்படி வந்தன? முன்னோர்கள் ஜாதி முறைகளை அங்கீகரித்தார்களா? இல்லை. திருமுறைகளில் ஜாதி வேற்றுமைக்கு ஒரு சான்றும் இல்லை. மாறாக மறுத்துள்ளன. 'ஜாதி, குலம், பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை என்பது திருவாசகம்.

ஒழுக்கத்தின்பாற்பட்டதாக ஜாதி முறைகளைப் பின்பற்றினாலும் தவறில்லை. அதாவது சிவநெறியில் நின்றொழுகுபவர்கள் சைவர்கள் என்பது சமயம் ஜாதியாக மாறிய தீமை வைணவத்தில் இல்லை. வைணவர்கள் என்றால் திருமாலை வணங்குபவர்கள் என்பதே பெறப்படும் பொருள். ஆனால், சைவர்கள் என்று கூறினால், சிவனை வழிபடுபவர்கள் என்று பொருள்படுவதற்குப் பதிலாக ஜாதியையே குறிக்கிறது. ஆதலால், ஜாதி முறைகள் மீது வெறுப்பு. மகேசுவர பூஜை என்ற பெயரில் ஜாதி முறைக்கு அங்கீகாரமா? அல்லது மகேசுவர பூஜையைப் புறக்கணித்துப் போராடுவதா? போராட்ட உணர்வே வெற்றி பெற்றது.