பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நமது பணிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்." என்று பேசினார்.

விழா முடிந்த பிறகு போட்டோகிராபர் ஒருவர் தனது ஸ்டுடியோவுக்கு இரண்டு பேரையும் படம் எடுக்க விரும்பி அழைத்தார். பெரியார், "மகாசந்நிதானம் அங்கெல்லாம் வரமாட்டார்கள்" என்று மறுத்துவிட்டார்.

25

ரு நாள் மதுரையிலிருந்து நெல்லை வரையில் (1956-ல்) பெரியாருடன் காரில் பயணம். திருப்பரங்குன்றம் கடந்தவுடன் பெரியார் தமது பையிலிருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்தார். அதில்,

"குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்."


என்ற திருக்குறளைக் காட்டி நம்மிடம் தந்து படிக்கச் சொன்னார். விளக்கம் கேட்டார்.

தாம் பிறந்த குடியை ஆக்க விரும்புபவர்கள் காலம் கருதிக் காத்திருக்க மாட்டார்கள், குடி வளர்வதற்குரிய பணிகளைச் செய்வதில் ஒருபோதும் சோம்பல் காட்ட மாட்டார்கள். பெருமையை ஒரு பொருளாக எண்ண மாட்டார்கள் என்று விளக்கம் கூறினோம். தொடர்ந்து எங்கள் இருவரிடையிலும் விளக்கம், விவாதம், கருத்துப் பரிமாற்றம் என்று வளர்ந்தது. -

அன்று பெரியார் தமிழின வரலாற்றுப் பேராசிரியராக விளங்கிப் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார். தமிழர்களின் ஆட்சிகள் வீழ்ந்ததையெல்லாம் காரண காரியங்களுடன் விளக்கினார். நீதிக் கட்சி வரலாற்றையும் எடுத்துக் கூறினார். இந்தப் பயணம் இலக்கிய சமூகச் சிந்தனைக்குத் துணை செய்தது.