பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தமிழ்நாட்டு மடாதிபதிகளில் கப்பல் வழியாகவும் விமானம் வழியாகவும் உலக நாடுகளைச் சுற்றி வந்த மடாதிபதி - ஆதீனகர்த்தர் நாம் ஒருவர்தான்! யாம் பயணம் செய்யாத பகுதி ஆப்பிரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா மட்டும்தான். கம்யூனிஸ்ட் நாடுகளாகிய சோவியத் ரஷ்யா, செஞ்சீனா முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தமையால் சம வாய்ப்பு சமுதாயத்தில் ஈடுபாடு. "சம வாய்ப்புச் சமுதாயம் காண முதற்படி கூட்டுறவு” என்பது மாமேதை லெனின் வாக்கு. அதனால் கூட்டுறவு இயக்கத்தில் நமக்குத் தனி ஈடுபாடு. 1953-ல் முதன் முதலாக இலங்கைக்கு பயணம், இந்தப் பயணத்துக்குரிய ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர் பயண நூல் எழுதிச் சிறப்புப் பெற்ற சோம.லெ.! இவர் உலக நாடுகளைச் சுற்றி வந்தவர். நல்ல எழுத்தாளர். அவர் இப்போது அமரர். அவரது அருமை மகன் சோமசுந்தரம் அமெரிக்காவில் உள்ளார்.

இலங்கையில் மட்டக்களப்பில் தமிழ் மாநாடு நடந்தது. மாநாட்டை நடத்தியவர் அருள்தந்தை தனிநாயகம் அடிகளார். இவர் நல்ல தமிழறிஞர். உலகந் தழுவிய தமிழ் அமைப்பைக் கண்ட பெருமை தனிநாயகம் அடிகளாருக்கே உரியது. Tamil Literature என்ற ஆங்கில இதழை நடத்தியதன் மூலம் தமிழை உலகத்தின் வீதிகளுக்கு எடுத்துச் சென்றவர் தனிநாயகம் அடிகளார். இவர் தமிழ் மாநாட்டுக்கு அழைத் திருந்ததன் வாயிலாக நமது முதல் அயல்நாட்டுப் பயணம் அமைந்தது.

1953-ல் இலங்கையில் பதினைந்து நாட்கள் சுற்றுப் பயணம். தமிழ் மாநாட்டில் நல்ல கூட்டம். இலங்கைத் தமிழர்களின் தமிழார்வம், தமிழ்நாட்டினர் தமிழார்வத்துக்கு எத்துணையும் குறைந்ததல்ல. தமிழ் மாநாட்டில் இரண்டு நாட்கள் பங்கேற்பு! அதற்குப் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விரிவுரையாளர் மணி அருள்நந்தி அழைப்பு. பின் முஸ்லிம் கல்லூரியில் இந்து சமய மரபுப்படி வரவேற்பு.