பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

247



பலர் அன்பு அருள் என்று படிக்கும் போது அன்பும் அருளும் காக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்வார்கள். அடுத்த நேரமே அதை மறந்துவிடுவார்கள்.

கொத்தனாரும்-சமுதாயத் தலைவரும்

இலட்சம் செங்கல் கொட்டிக் கிடந்தாலும் அது கட்டிடமாவதில்லை. அவற்றை அடுக்கிச் சந்து பதிந்துதான் சுவரை எழுப்பவேண்டும். உடைந்த செங்கல்லையும் முழு செங்கல்லையும் இணைத்து இடைவெளி ஏற்பட்ட இடத்தில் முழுச் செங்கல்லையும் உடைத்துப் போட்டுச் சந்து நிரப்புவது போல, மனிதனும் தனது சொந்த மதிப்பையும், சுகத்தையும் குறைத்துக் கொண்டாவது சமுதாயச் சுவரை எழுப்ப முற்படவேண்டும். உடைந்த செங்கல்லையும் முழுச் செங்கல்லையும் இணைத்துச் சுவரை எழுப்புபவர் கொத்த னார்; சமுதாயத்தில் உள்ள வலிமையுடையவனையும், வலிமையற்றவனையும் இணைத்து ஒரு சேர அழைத்துச் செல்லுபவர் சமுதாயத் தலைவர்.

மலரும்-மனிதனும்

சமயவாதி என்றால் நல்ல மணமுள்ள மலர்போல இருக்க வேண்டும். மலரின் மணத்தினால் இன்ப அனுபவம் மனிதர்களுக்கேயன்றி மலருக்கல்ல. மலர் இருக்கும் செடி, அனுபவிப்பது பலருக்கு அருவருப்பூட்டும் உரத்தைத்தான். ரோஜா மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு விருந்தளிக்கிறது. அது போல மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பமளிக்க வேண்டும்.

விளையாட்டும்-வாழ்க்கையும்

கால்பந்து விளையாட்டு உங்களுக்குத் தெரியும். யாரையும் தரையில்விழச் செய்து வெற்றி பெற்றால் அது வெற்றியாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எதிரியையும்