பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

249



மனிதனும்-மரமும்

மண்ணில் முளைக்கும் மரம் ஊட்டமாகச் செழித்து வளர்ந்து பயன் தர, மண்ணோடும் விண்ணோடும் அதற்குத் தொடர்பு வேண்டும். கதிரொளியையும் காற்றையும் அது விண்ணோடு தொடர்பு கொண்டு தானே பெறுகிறது? அதுபோல, உலகந்தழிஇய வாழ்க்கை வாழ வேண்டிய மனிதனுக்குத் தாய்மொழி அறிவு மட்டும் போதாது; பிற மொழிகளின் தொடர்பும் வேண்டும். மரத்திற்கு மண்ணோ டுள்ள உறவு போன்றது மனிதனுக்குத் தாய்மொழியோடு உள்ள தொடர்பு! விண்ணோடுள்ள உறவு போன்றது பிற மொழித் தொடர்பு.

நாவற்பழமும்-நண்பர்களும்

பழுத்துக் கனிந்த நாவற்பழம் நல்ல சுவையுடையதாக இருக்கும். அவ்வாறு பழுத்துக் கனிந்த நாவற்பழம் கீழே உதிர்ந்தால் அதிலே மண் ஒட்டிக் கொள்ளும். அந்தப் பழத்தின் மீது நமக்கு விருப்பம் இருக்கிறது. ஆனாலும் அதில், ஒட்டிக் கொள்ளும் மண்ணை நாம் வெறுக்கிறோம். நாம் வெறுக்கிற அந்த மண் ஒட்டியதால், நாம் நாவற்பழத்தையே ஒதுக்கி விடுகிறோமா? இல்லையே! பழத்திற்குக் கேடு வராமல் மண்ணை ஊதித் தள்ளிவிட்டுப் பழத்தைப் பயன் படுத்தத்தானே செய்கிறோம். அதுபோல, நாம் விரும்புகிற சிலரிடத்தில் நமக்கு விருப்பமில்லாத-நாம் வெறுக்கத்தக்க சில குணங்கள் இருக்கலாம். ஆனாலும், நமக்குப் பிடிக்காதநாம் விரும்பாத அந்தக் குணங்களை, நாவற்பழத்தில் ஒட்டிய மண்ணை நாவற்பழத்திற்குக் கேடு வராமல் ஊதி ஒதுக்குவது போல, அவர்களுக்கு வருத்தமோ நோவோ ஏற்படாத வண்ணம் விலக்க முயற்சிப்பதுதான் நல்லது.

கு.XVI.17.