பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

253



இருக்காது. எனவே சமுதாய வளர்ச்சிக்கு சிந்தனையறிவு தேவை.

மருந்தும்-பணமும்

மருத்துவர்களிடமிருக்கும் மருந்து மற்றவர்களின் உடல் நோய் தீர்க்கப் பயன்படுவது போல, செல்வந்தர்களிடம் குவிந்து கிடக்கும் பணம் மற்றவர்களின் வறுமை நோய் நீக்கப் பயன்பட வேண்டும்.

வாய்க்கால்களும் உழைப்பாளிகளும்

வரத்து வாய்க்கால்கள் மூலமே ஏரிக்குத் தண்ணிர் வரும்; அந்த வரத்து வாய்க்கால்களைக் கோடை காலத்தில் சரிவர மராமத்துச் செய்து வைத்திராவிட்டால் ஏரிக்குத் தண்ணிர் எப்படி வரும்? அதுபோல, உழைப்பு மூலமே செல்வந்தர்களுக்குப் பணம் சேர்கிறது. செல்வந்தர்களுக்குப் பணம் வருகின்ற வாய்க்கால்களான உழைப்பாளிகளைச் சரிவரப் பேணிக் காக்கத் தவறி விட்டால் செல்வந்தர்களுக்கு எப்படிச் செல்வம் சேரும்.

தனி மனிதனும்-தனி மரமும்

தனி மரம் ஒன்று நின்றால் அந்த மரத்தினடியிலும் நிழல் இருக்கும். ஆனாலும் அந்த மரத்தைச் சுற்றி வெப்பம் இருக்குமானால், அந்த மரத்தின் நிழல் நாம் அனுபவிக்கத் தக்க குளிர்ச்சியுடையதாக இருப்பதில்லை. மரங்கள் அடர்ந்த சோலையாக இருக்குமானால் அதில் உள்ள நிழல் பெரிதும் அனுபவிக்கத்தக்க தண்மையும் இன்பமும் உடையதாக இருக்கும். செழிப்பற்ற சமுதாயத்தில் ஒரு தனி மனிதனும், செழிப்புள்ள சமுதாயத்தில் ஒரு தனி மனிதனும் இருக்கிறார்கள்.

செழிப்பற்ற சமுதாயத்தில் உள்ள ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இன்பம் போலத் தோன்றித் துன்பம் செய்யும்.