பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பசிய வேர்-பசு மரத்தின் வேர் ஓடிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வேரை வெட்டி எடுத்து விட்டு மீண்டும் அந்த ஆறேழு வேலைக்கார்களும் சேர்ந்து முழு முயற்சியோடு அந்தக் கல்லைப் பதித்தார்கள். இந்தக் காட்சி தவத்திரு அடிகளார் அவர்களின் மனத்தில் மின்னல் போலப் பளிச்சிட்டு, ஓர் அழகான உவமையாக வெளிவந்தது. "பல டன் எடையுள்ள-பலர் சேர்ந்து முழு முயற்சியுடன் பெயர்க்கக் கூடிய இந்தப் பெரிய கல்லை ஒன்றரையடி நீளமுள்ள இந்த வேர் நெம்பித்துக்கிவிட்டது; இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? கல் பல டன் எடையுள்ளது. ஆனாலும் அதற்கு உயிரோட்டமில்லை. வேரோ சுமார் ஒன்றரை முழ நீளமிருந்தாலும் அதற்கு உயிர்ப்பு இருக்கிறது-உயிரோட்ட மிருக்கிறது. அது பசுமரத்தின் வேர். உயிரோட்டமில்லாத பட்ட மரத்தின் வேர் ஒன்றை இந்தக் கல்லுக்கு அடியில் போட்டால் வேர் நசுங்கிப் போகும். மனிதனும் இப்படித் தான்! அவன் நாளும் சிந்தனையால் செயலால் வளரும் சக்தி படைத்தவனாக-உயிரோட்டமுள்ளவனாக இருந்தால் அடுக்கடுக்காகத் துன்பங்கள் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று வெற்றி பெற்று விடலாம். மனிதனுக்கு உயிரோட்டமிருக்கிறது என்பதன் அடையாளமே அவன் நாள்தோறும் சிந்தனையால் செயலால் வளர்வதுதான்!” என்று கூறி முடித்தார்கள். பக்கத்தில் இருந்த அனைவரும் அடிகளார் அவர்களின் உவமையின்பத்தில் மூழ்கித் திளைத்தார்கள்! எவ்வளவு அழகான உவமை!

மனித மனமும்-வண்ணத்துணியும்

அடிக்கடி வண்ணம் மாறுகிற சென்னைத் துணி (Bleeding Madras) போல மனித மனம் அடிக்கடி மாறுகிற தன்மையுடையதாக இருக்கின்றது.