பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொய்யி லங்கெனைப் புகுத விட்டு நீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே!”

தங்கத்தின் மதிப்பறியாக் குழந்தை போல தன்னைக் கற்பனை செய்து கொள்ளுகின்றார் மாணிக்கவாசகர். தங்கக் கிண்ணம் போன்றது இறைவன் வழங்கிய தண்ணருள்.

அடுத்து, குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது கெடுத்தாலும் குழந்தையின் மீது யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். ஆதலால், குழந்தையின் கையில் கொடுக்கப் பெற்ற தங்கக் கிண்ணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அத்தாய்க்கு இருக்கிறது. அதையுணர்ந்த தாய் குழந்தையைத் தொடர்ந்து சென்று அந்தப் பொற் கிண்ணத்தைக் காப்பாற்றுவது போல தன்னையும் காப்பாற்ற வேண்டும் என்று மாணிக்கவாசகர் விண்ணப்பிக்கின்றார். காரணம், இறைவன் வெண்ணிற்று மேனியன். அவ்வாறு வெண்ணிற்று மேனியனாக இருக்கின்றான் என்று குறிப்பதன் பொருள் ஆன்மாக்கள் வினை நீக்கம் பெற வேண்டும் என்பதற்காகவே அவன் வெண்ணிறணிகின்றான் என்று ணர்த்தலேயாகும். ஆதலால் குழந்தையின் அறியாமைக்குத் தாய் பொறுப்பேற்று ஈடுசெய்தல் போலத் தன்னுடைய அறியாமைக்கும் இறைவனே பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். அறியாக் குழந்தையின் தவறைத் தாய் திருத்திப் பாதுகாப்பது போலப் பொய்யிலங்குகின்ற தன்னை இறைவன்தான் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார். ஒரு தாய் குழந்தைக்கு உவப்பான பொருள் களைக் குழந்தைகளிடத்துக் கொடுத்தும், அனுபவிக்கச் செய்தும், அழிவு வராமல், அனுபவம் இடையறாமல் பாதுகாத்து அனுபவிக்கச் செய்வது போலத் தனக்கு இறைவன் வழங்கிய திருவருளின்பத்தை இடையறாமல் அனுபவிக்கும்படி செய்து பாதுகாக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கின்றார். எவ்வளவு அழகான உவமை!