பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

295



கால்நடை மருத்துவமனை என்று அறிவிப்புப் பலகை போட்டிருக்கிறார்கள். எனக்கு ஒருநாள் ஐயம் வந்தது. இது என்ன கால்நடை என்றால் என்று பக்கத்திலுள்ளவரைக் கேட்டேன். 'கால்நடை' என்றே திருப்பிச் சொன்னார். திருப்பித் திருப்பிக் கேட்ட பிறகு "காலால் நடக்கின்ற மாடு, ஆடுகள்” என்று சொன்னார். அப்படியானால் மனிதனும் காலால் தானே நடக்கின்றான்? அவனுக்கும் இந்த மருத்துவமனை பயன்படுமா? என்று சிந்தித்தேன். காலால் நடப்பது மட்டுமே கால்நடைகளின் இயல்பு.

சிந்தனையாலும், கருத்தாலும், அறிவாலும், - நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், படைப்பாற்றலாலும், நடக்க வேண்டிய பொறுப்பு மனிதனுடையது. அவன், தான் நடக்க வேண்டிய தடத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். புவி அவனை நடத்தக்கூடாது. புவியை அவன் நடத்தவேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் "புவியை நடத்துக! பொதுவில் நடத்துக” என்று சொன்னான்.

சுதந்திர தினத்தன்று இதைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்! பாரதி, சுதந்திர தினத்தை மக்கள் தினமாக நினைத்துப் பாடுகின்றான். ஆடச் சொல்லுகின்றான், பள்ளுப் பாடச் சொல்லுகின்றான், "ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாடுகிறான். இன்றைக்கு எந்த மக்கள் ஆடுகிறார்கள்? எந்த மக்கள் பள்ளுப் பாடுகிறார்கள்? எந்த நாட்டு, நகர விதிகளில் சுதந்திர தினவிழா மக்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது? இன்னமும் தீபாவளிக்கு இருக்கிற செல்வாக்கு குறையவில்லை. பொங்கலுக்கு இருக்கிற, செல்வாக்கு குறையவில்லை. சுதந்திர தினவிழா அரசு பணிமனைகளில், கல்வி நிலையங்களில் கொடியேற்று விழாவாக முடிந்து விடுகிறது. பாரதியின் ஆசை அதுதானா? இல்லை. தினந்தோறும் மக்கள் ஆடவேண்டும். சுதந்திரப் பள்ளுப் பாடவேண்டும். ஆனந்த சுதந்திரம் அடைந்து