பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொதுவாக ஆண்கள் மத்தியில், அவர்களைப் பார்த்துப் பெண்கள் நகைப்பதைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். கோபம் வந்துவிடும். ஆனால் ஒரு பெண் பலநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பரிகாசம் செய்து நகைத்துக் கொண்டே இருக்கிறாள். சூடு சுரனை வந்ததாகத் தெரியவில்லை. இனிமேலும் வருமா? வராது போனால் இந்தியா வளமான நாடாகாது. 2001ல் புதிய நாட்டைக் காண்பதும் அரிது.

அந்தப் பெண் யார்? அவள்தான் நிலமென்னும் நல்லாள்! தன்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணிச் சோம்பலுடன் அயர்ந்து - செயலற்று இருப்பவர்களைப் பார்த்து நிலமென்னும் நல்லாள் நகைக்கின்றாள்! ஆம்! நமது நாட்டில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசு. பசுமைப் புரட்சிக்கு இலக்காகாத தரிசு. ஏன் இந்த அவலம்?

உழைப்பும் சுறுசுறுப்பும் இணையானவை. சுறு சுறுப்பு, உழைப்பைத் துண்டும். ஆனால், சிலர் சுறுசுறுப்பாக இருப்பர்; முறையாக உழைக்க மாட்டார்கள். இவர்களுடைய சுறுசுறுப்பினால் என்ன பயன்? யாதொரு பயனும் இல்லை. அதுமட்டுமல்ல. எதைச் செய்வதில், எதைச் சாதனையாக மாற்றுவதில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

“வேலை செய்வது கடினம், ஆனால், எந்த வேலையும் கடினமன்று” என்பது சைப்ரஸ் பழமொழி. வேலை செய்வது கடினமல்ல. வேலை செய்ய விருப்பம் இல்லாததால் வேலை கடினமாகத் தோன்றுகிறது.

ஆனால், ஆர்வத்துடன் அறிவறிந்த ஆள்வினையின் மூலம் எந்த வேலையையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும். ராபர்ட் புரூஸ் என்ற அரசன் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். பலமுறை போர்முனையில் தோற்றான். கடைசிப் போரில் தோற்று ஒரு குகையில் ஒளிந்திருந்தான்.