பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மற்றவர்க்கும் வழங்கி வாழ்விப்பது ஆக்கம். உழைப்பு நிறைந்த வாழ்க்கையே நோன்பு.

உழைக்கும் கால்களே தவம் செய்யும் தாள்கள் என்றது புறநானூறு உழைக்கும் எருதே நந்தி கடவுட்கொடியின் சின்னம். ஏறுதான் இறைவன் ஊர்தி, எருது உழைப்பின் சின்னம் “உழுத நோன்பகடு அழிதின்றாங்கு” என்பது புறநானூறு.

உழைப்புக்கு ஊக்கம் தேவை. ஊக்கமே உடைமை என்று கூறும் வள்ளுவம். "உள்ளம் உடைமை உடைமை” ஒருவன் செல்வந்தனாய் இருப்பதை விட உழைப்பாளியாக இருப்பது உயர்வு. செல்வம் அழியும். உழைப்புத் திறன் அழியாது. ஊக்கம் என்பது உள்ள எழுச்சி, பணிமேற் செல்வதற்குரிய பாங்கு, ஒளவைப் பாட்டியாரும் "ஊக்கமது கைவிடேல்" என்றார்.

உழைத்தால் முன்னேறலாம். இது பொதுவிதி. ஆனால் நம்முடைய நாட்டில், உழைத்தாலும் முன்னேற இயலவில்லை. ஏன்? பெரும்பாலோர் சொத்து இல்லாதவர்கள். சொத்துடமையாளரைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. பிழைப்புக்கு வழி கூலியுழைப்பே.

சுரண்டுகிற பொருளாதாரம் உள்ளவரையில் உழைப்பு பூரண ஆக்கத்தைத் தராது. செல்வம், செல்வமுடையோர் இடத்திலேயே சேருகிறது. ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்.

ஆனால் இது உழைப்பின் குறையன்று செல்வரிடம் சேரும் செல்வம் கூடப் பாட்டாளிகளின் உழைப்பின் விளைவே. பொருளாதார சுதந்திரமுடைய கூட்டுடமைச் சமுதாய அமைப்புத் தோன்றினால்தான், வளம்பெற முடியும். அதுவரையில் மனித உழைப்பு ஆதிக்க சக்திகளால் சுரண்டப் பெறுவது நடந்தே தீரும்.