பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

331



ஆதலால், இன்றைய சூழ்நிலையில் கடுமையாக உழைப்பவர்கள் பூரண வாழ்வு வாழ இயலவில்லை. இது வினோதமான பைத்தியக்காரத்தனமான சமுதாய அமைப்பு. அரசாங்க இயந்திரத்தை, சந்தைகளை, ஆளுமை செய்யும் பொறுப்பும், அதிகாரமும் என்று உழைப்பாளிகள் கைக்கு வருகிறதோ அன்றுதான் உழைப்பாளிகள் சிறப்பாக வாழமுடியும்.

புவியை நடத்தும் அதிகாரம் உழைக்கும் மக்கள் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்த வையம் பொதுவில் நடத்தப் பெறும்.

உழைப்பின் அருமைப்பாட்டை உலகச் சிந்தனையாளர்கள் ஒரு குரலில் புகழ்கின்றனர். உன் கண் முன்னே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள மனித நாகரீகத்தைப் பார்! உன் முன்னே இருக்கும் மாடமாளிகை, கூட கோபுரங்களைப்பார். அவ்வளவும் ஆக்கம்! சென்ற காலத் தலைமுறையினுடைய படைப்பு!

இந்த மகத்தான சாதனையைப் பார்த்த புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பிரமித்து நிற்கிறான்! விண்ணில் உள்ள விண்மீன்கள் உழைப்பாளிகளின் உடலில் தோன்றியுள்ள கொப்புளங்கள், என்று பாடுகின்றான்.

"அறிவற்றவன் சிரத்தையுடன் கூடிய உழைப்பை இழந்தவன், கெடுப்பார் இல்லாமலே கெட்டுப்போகிறான்" என்றார் விவேகானந்தர்.

பல சமயங்களில் வேலை செய்வது கடினமாக இருக்கிறது. இது ஒரு மனோ நிலை. சோம்பலுக்கும் சுக வாழ்வுக்கும் அடிமைபட்ட மனோ நிலை. ஆனால் உண்மையில் நோக்கினால் எந்த ஒரு வேலையும் கடினமில்லை. "ஒரு முயற்சியில் உழைப்பில் வெற்றிபெற அவசரமும் காட்டக் கூடாது. அது போழ்து, பணி இடையில் இளைப்பாறுவதும் கூடாது. தொடர்நிலை உழைப்பே வெற்றியை தரும்” என்றான் கதே.