பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நமது நாட்டில் வறுமை, நகர்ப்புறங்களிலும் உண்டு. ஆயினும் கிராமப்புற வறுமை மிக மிகக் கொடியது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று - கிராமப்புற வறுமையை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நகர்ப்புற வறுமையாளர்கள் போராடும் இயல்பினர்.

கிராமப்புற மக்கள், வறுமையை இயற்கை என்று கருதி, அந்த வறுமையுடனேயே வாழ்வதில் பழகிப் போய் விட்டனர். ஆதலால் கிராமப்புற வறுமையாளர்களிடையில் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற பழமொழிக்கு நல்ல செல்வாக்கு உண்டு.

இந்த மனப்போக்கு, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்யாது. வறுமை என்பது வசதிகள் அற்ற வாழ்க்கை. ஏழ்மை என்பது உணவுக்குப் போராடும் நிலை. நமது நாட்டில் பலர் வறுமையில் வாழ்கின்றனர். ஏராளமான கிராமப்புற மக்கள் ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர்.

இதில் வருத்தம் என்னவெனில், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாகிய நுகர் பொருட்கள் உணவுப் பொருள்களை கிராம மக்களே உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவர்கள் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக ஏற்படும் விலை வீழ்ச்சியினாலும், பணத் தேவையினாலும் ஏழ்மைக்கு ஆளாகிறார்கள். நெல்லை உற்பத்தி செய்பவன் நியாய விலைக் கடைகள் முன், நீண்ட நெடிய வரிசையில் நிற்கிறான் அரிசி வாங்க! -

ஆம்! நமது நாட்டில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், விவசாயம் செய்யப் பெறாமல் தரிசாகக் கிடக்கிறது. தேசத்தின் செல்வ வளர்ச்சிக்குரிய ஆதாரங்களை, உற்பத்திச் சாதனங்களை, முறையாகப் பயன்படுத்தி உற்பத்தியைச் செய்து, தேசத்தின் செல்வத்தைப் பெருக்க வேண்டும்.

இன்று சில கடுமையான முயற்சிகளை, வழிமுறைகளை, மேற்கொள்ளாவிட்டால் 2001லும் நமது நிலை இப்படியே