பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

353



இந்தப் போரினைச் சுயநலக்காரர்கள், தவறான - முறையற்ற நிலையில் ஒரு அந்தஸ்தைப் பெற்றிருப்பவர்களே எதிர்ப்பார்கள். இவர்களது எதிர்ப்புகளை அஞ்சாது எதிர்த்து வெற்றி கண்டால்தான் சீரான பொருளாதாரம் வளரும்; நிலை நிற்கும்.

நமது நாட்டின் வறுமை வினோதமானது. நாட்டின் தேசீய வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குத் தனி நபர் வருவாய் உயரவில்லை. ஏன்? இதுதான் இன்றுள்ள புரியாத புதிர். நாட்டின் வருவாய் வளர்ந்திருந்தாலும், நாட்டின் மைய அரசும் சரி - மாநில அரசும் சரி - நிதிப் பற்றாக்குறையுடைய நிதி நிலைத் திட்டத்தையே அளிப்பதற் குரிய சூழ்நிலையே நிலவுகிறது.

ஒட்டகத்தின் முன் துரும்பெடுத்துப் போட்டு, சுமையை இறக்கிவிட்டதாகப் பாவனை செய்வது போல, மக்களுக்குச் சில சலுகைகளை அளிப்பதால் பயனில்லை. அதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. பணவீக்கத்தாலும் மறைமுக வரிகளாலும் விலைவாசிகள் ஏறிவிடுகின்றன.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிதி நெருக்கடி தோன்றி வளர்ந்து விடுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அரசின் நிதிநிலைத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை கோடிக் கணக்கில் உயர்ந்து விடுகிறது. செல்வர்களுக்கு நிறைய வரிச் சலுகைகளை அளித்தாலும் நாட்டில் முதலீடு பெருகவில்லை.

அதனால் கிடைத்த பணம், ஆடம்பரமான நுகர்வுப் பொருட்களை வாங்கவே செலவிடப்படுகிறது. நுகர்வுச் சந்தை - அதுவும் ஆடம்பர நுகர்வுச் சந்தை வளர்வதன் மூலம் பணச் சுழற்சி ஏற்படாது. அதனால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. புதிய செல்வங்களும் உருவாகா. வேலை வாய்ப்புக்களும் பெருகி வளராது.