பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆதலால் வாழ்க்கைக்கு இன்றியமையாததல்லாத ஆடம்பரச் செலவுகளில் செலவு செய்வதை தடுத்து முதலீடாக மாற்றுவதற்கு ஏற்றாற்போல செலவு வரி விதிப்பதைப் பற்றி, சிந்திக்க வேண்டும்,

தமிழ்நாட்டில் இரவும் பகலும் சினிமா தியேட்டர்களின் இயக்கம். சினிமா தியேட்டர்களுக்கு வரிவிலக்குச் சலுகைகள். சினிமாக் கொட்டகைக்காரர்கள் விருப்பம் போலக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். இவையெல்லாம் மனிதகுலத்தைப் பொருளாதார முயற்சிகளிலிருந்து விடுவிப்பவையாகும்.

உழைக்கும் நேரத்தில் திரைப்பட அரங்குகளில் இருந்தால், தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து இருந்தால் எப்படிப் பொருளாதாரம் வளரும்? நாட்டின் நிலையிலும் சரி - தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி - சேமிப்பு பெருகி வளர்ந்து அந்தச் சேமிப்புகள் முதலீடு ஆகும் வகையில் சமூகமும், அரசும் இயங்க வேண்டும்.

சேமித்து முதல் தருபவர்களுக்கு அரசு சலுகைகள் கூட வழங்கலாம். ஆனால் நமது நாட்டில் சேமிப்பு முதலாக மாறுவதில்லை. ஒன்று பணமாக இருக்கும். அல்லது அணிகலன்களாக இருக்கும். திட்ட முதலீட்டுச் செலவு கூடி வருதல் வேண்டும். திட்ட முதலீட்டுச் செலவு கூடினால்தான் பொருளாதாரம் வளரும். புதிய பொருளாதாரக் கொள்கை வளரும்.

விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கவில்லை. ஆயினும், வர்த்தகத் துறையிலும், தொழில் துறையிலும் சில விளைவுகள் ஏற்பட்டுள்ளது உண்மை. ஏற்று மதியில் சற்றேறக் குறைய 21 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. அன்னியச் செலவாணி கையிருப்புக் கூடி இருக்கிறது.