பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

355



இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதெனினும், பயன் அடைந்தவர்கள் தொழிலதிபர்கள்; சாதாரணப் பொது மக்கள் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் பொருளாதார முயற்சிகளே நடைபெறவில்லை என்று கூறமுடியாது. நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்குரிய பணிகள் பரந்த அளவில் நடைபெறுவது உண்மை. இம் மாபெரும் புரட்சியானது ஏமாற்றத்தைத் தரக்கூடிய தாமதங்கள், தடங்கல்களால் பாதிக்கப்பட அனுமதித்துவிடக் கூடாது.

பொருளாதார வளர்ச்சி தொய்வின்றி நடைபெற நிர்வாக இயந்திரம் திறமையுடையதாக இருக்கவேண்டும். நிர்வாக இயந்திரம் பின்னோக்கிச் செல்கிறது. சிகப்பு நாடா முறை நமக்கு வழிவழி வந்த பிற்போக்குத் தன்மை, நமது பாரம்பரியத்தின் மிச்ச சொச்சம்.

பொருளாதார வளர்ச்சி சீராக அமையவேண்டு மானால் நிர்வாக இயந்திரம் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும். நமது நாட்டின் வளத்தைப் பெருக்க வேண்டும் என்ற கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு, சேவை செய்யும் அலுவலர்கள் தேவை. ஊழியர்கள் தேவை.

பொருளாதர வளர்ச்சியில் இன்றியமையாத பகுதி வேலைவாய்ப்பு. இன்று வேலை வாய்ப்பில் உற்பத்தி சார்ந்த வேளாண்மை, கால்நடைத் துறைத் தொழில் வளர்ச்சியில் ஈடுபட இந்த நாட்டு இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை. அவர்கள் எங்காவது சிற்றெழுத்தர்களாக - கூரியர் சர்வீசு வேலை போன்றவைகளில் ஈடுபடத்தான் விரும்புகின்றனர்.

காரணம் அளவுக்கு விஞ்சிய பய உணர்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு உணர்வு. அவர்கள் வீட்டு வாயிலைத் தொழில்கள் தட்டினாலும், உற்பத்தி சார்ந்த தொழில்களில், கடின உழைப்பில் ஈடுபட அவர்கள் விரும்பவில்லை.