பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

359


உயிர் வாழ்வதற்கான நுகரும் பொருள்களே என்பதுதான் தமிழ்வழிக் கருத்து.

"யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல” என்ற பரிபாடல் வரியும் இதனையே வற்புறுத்துகின்றது. மனிதர் உண்டு, உடுத்தி வாழ்தலுக்குரிய பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலே, தொழில்களில் எல்லாம் சிறந்தது.

அதனாலேயே, வள்ளுவம், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்றது. ஆனால் இதுவரையில் பல துறைகளில் சக்கரவர்த்திகள் உருவாகியிருப்பதைப் போல, உழுவோரில் சக்கரவர்த்திகள் உருவாகவில்லை.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற பாரதியின் பாடல் இன்னமும் பாடலாகவே இருக்கிறது. உழவர்களும், தொழிலாளர்களும் இன்னும் சமூகத்திலும் சரி ஆட்சியிலும் சரி - போதிய அந்தஸ்தைப் பெறவில்லை. உழவும், தொழிலும் சிறந்து விளங்கி, உழவர், தொழிலாளர் வாழ்க்கை, என்று சீர்மையுடன் அமைகின்றதோ, அன்றுதான் இந்தியப் பொருளாதாரம் சீரானதாக அமையும்.

உலகம் எப்பொழுதும் தன்னல உணர்ச்சியிலேயே செயல்படும். இஃது இயற்கை இந்தத் தன்னல உணர்ச்சியைத் தடை செய்யக்கூடாது. நல்லவர்களுடைய பிறர் நலம் நாடும் நோன்புடன் இணைத்து, கயவர்களிடத்தில் காணப்படும் தன்னலத்தின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். இது ஒரு சிறந்த பணி.

நமது பொருளாதார ஆக்கத்திற்குரிய முயற்சிகள், மூன்று காரணங்களிலிருந்து தோன்றி வளர்கின்றன. அவை தேவைகள், தேவைகளை அடையும் முயற்சிகள், திருப்தி (Wants, Efforts, Satisfaction) என்ற மூன்றாகும்.