பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காற்றுத் தடுப்பு மரங்களை - உயர்ந்த மரங்களை - உதி, பூவரசு, பலா முதலியவைகளை நடுவது நன்மை பயக்கும். இதனால், காற்றால் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நமக்குத் தீங்கு செய்யும் மண் அரிப்பு, மனிதனால் - அவனுடைய அக்கறையின்மையால், அலட்சியத்தினால் ஏற்படுவதேயாகும். மண் அரிப்பு, மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் அடங்கியதே! தடைபடா மண் அரிப்பு, வறுமைக்குரிய வாயில், சமுதாயத்தின் வலிமைக்கும் பொருளாதாரச் செழிப்புக்கும் உலைவைக்கும்.

இன்று நம்முன் உள்ள தலையாய பிரச்சனைகளுள் ஒன்று, உடனடியாகக் கவனிக்க வேண்டிய பிரச்சனைகளுள் தலையாயது மண் அரிப்பேயாகும். மண் அரிப்பு, இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். ஆதலால்,

நிலத்தினை உழாமல் தரிசாகப் போடாதீர்!

நிலத்தினை மேடு பள்ளமாக அமைய விடாதீர்!

சமநிலைச் சமுதாயம் காண முதல் முயற்சி,
சமநிலை நில அமைப்பு!

பெய்யும் மழை நீர்,
நின்றும் நிற்காமலும்
மெல்ல நிலமகளைத் தழுவி ஓடச் செய்வீர்!

மனிதனுக்கு ஆடைபோல -
நிலத்திற்கு ஒரு பசுமை, போர்வை!

கண்டபடி ஆடு மாடுகளைக்
கட்டுப்பாடில்லாமல் மேயவிடாதீர்!

விரைவில் கொள்ளை லாபம் தரும் எதுவும்
அழிவையே தரும்.

காடுகளை அழிக்கும் வெள்ளாடுகளைத் தவிர்ப்பீர்!