பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இடைத்தரகர் இல்லாமல் இருப்பது நல்லது. தவிர்க்க இயலாது எனில், தரகர்களின் எண்ணிக்கையையாவது குறைக்க வேண்டும். அப்போதுதான் விலை குறையும்; விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்.

நமது நாடு, காய்கறி உற்பத்தியிலும் பற்றாக்குறையுடையதேயாகும். அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதும் கூடக் காய்கறியே என்பதை மறந்து விடக் கூடாது. ஒரு ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்ய ரூ. 100 செலவாகும்; ஆனால் வரவு ரூ. 4750 ஆகும். தண்ணிர்த் தேவையும் குறைவே. பராமரிப்பில் மட்டுமே அக்கறை தேவை.

அடுத்து நமது நாட்டுப் பொருளாதாரத்தில் நெல் கணிசமான பங்கு வகிக்கிறது. நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பது மகிழத்தக்கது.

ஆயினும், நமது நாட்டில் நெல் உற்பத்தி ஹெக்டேர் ஒன்றுக்கு 3% டன்னுக்குப் பதில் 1% டன்னாகத்தான் இருக்கிறது. நெல் உற்பத்தியை மேலும் கூட்டினால் வேளாண்மைப் பொருளாதாரம் சிறக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மைப் பொருளாதாரம் முதல் இடத்தை வகிக்க வேண்டும். தரிசு நிலங்கள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் மேம்பாடு அடைய வேண்டும்.

விவசாயத்தைப் பன்முகமாகச் செய்தால்தான் நெல், பழமரங்கள், தென்னை, காய்கறிகள் என்று நிலத்தைப் பிரித்துச் சாகுபடி செய்தால்தான் ஆண்டு முழுவதும் வருமானம் வரும்.

கூடுதலான நிலப்பரப்பில் வியாபார ரீதியான பழங்கள், தென்னை போன்றவைகளை உற்பத்தி செய்தால் தான் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் அந்நியச் செலவாணியை அதிகமாக அடைய முடியும்.