பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

379



ஒரு மனிதனுக்குச் சராசரி ஒரு நாளைக்கு 280 கிராம் பால் தேவை. தமிழ்நாட்டில் கிடைப்பதோ சராசரி 61 கிராம்தான். இந்தப் பற்றாக்குறையைப் போக்க, தரமான கால்நடைகளை வளர்க்க வேண்டும்.

நவீன அறிவியல் சார்ந்த பராமரிப்பு முறைகளைக் கையாண்டு பால் உற்பத்தியைக் கூட்ட முயலவேண்டும். அப்போதுதான் நமது பொருளாதாரம் மேம்பாடுறும்.

நமது தேவையில் 37.5 விழுக்காடு பாலே இப்போது உற்பத்தியாகிறது. பால் உற்பத்தி மும்மடங்கு உயர்ந்தால்தான் சுயதேவை பூர்த்தியாகும். மக்களுக்கு நலம் சார்ந்த வாழ்க்கை கிடைக்கும்.

பண்ணைகளில் வளர்க்க, பசுக்கள் சிறந்தவையா? எருமைகள் சிறந்தவையா? கணக்கின்படி பார்த்தால் பசுவை விட, எருமை அதிகப் பால் கறக்கிறது. பசுவின் பாலில் உள்ளதைவிட எருமைப் பாலில் இரண்டு மடங்கு வெண்ணெய் அதிகமாக இருக்கிறது. பண வருவாயை நோக்கின் பசுவைவிட எருமைதான் நல்லது.

ஆனால், பசு தூய்மையாக இருக்கும். எருமை அசுத்தமானது. எருமைகள் வளர்ப்பதால் நோய் பரவுவதற்குரிய வாயில்கள் மிகுதி. மக்களின் நீண்ட நெடிய நல்வாழ்வு நோக்கில் பசுமாடுகள் வளர்ப்பே நல்லது.

மாடுகளின் வளர்ச்சி 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் முடிந்துவிடும். அதன் பிறகு அவை வளர்ச்சி அடைவதில்லை. பசுமாட்டின் சராசரி வயது 20 முதல் 23 ஆண்டுகளாகும். எருமை மாட்டின் சராசரி வயது 23 முதல் 25 ஆண்டுகளாகும்.

ஆகவே, மாடுகளின் வளர்ச்சிப் பருவமாகிய கன்றுகளாக இருக்கும் பருவ காலத்தில் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொடுத்து நன்றாக வளர்க்கவேண்டும். கன்றுகளுக்குப் புரதச் சத்துள்ள உணவு அதிகம் தேவை.