பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

383


அதிகமாக உள்ள குதிரை மசால், பில்லி பெசரா, பர்கி ஆகியவைகளும் பசுந்தீவனமாகப் பயன்படும்.

கால்நடைகளுக்குக் கலப்புத் தீவனம், பசும்புல், வைக்கோல் ஆகியவைகள் தினசரி தீவனத்தில் இடம் பெற வேண்டும். மாட்டின் எடையில் ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் ஒரு கிலோ காய்ந்த புல்லும் மூன்று கிலோ பசும்புல்லும் கொடுப்பது நடைமுறை. இத்துடன் 15 கலப்புத் தீவனமும் தரவேண்டும்.

பால் தரும் மாடுகளுக்குத் தீவனம் தரும்பொழுது அவற்றின் எடை, கொடுக்கும் பால் அளவு, பாலின் கொழுப்புச் சத்து போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தீவனங்கள் தரவேண்டும்! பசுக்களுக்குப் புரதம், எரிசத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்து மற்றும் தாதுக்கள் ஆகியவை நாள்தோறும் தேவைப்படும்.

ஆயினும், புரதம், எரிசத்து, தாதுச்சத்துக்கள், சுண்ணாம்பு மணிச் சத்துக்களுக்கு மட்டுமே முதன்மையான இடமளிக்கப் பெறுகிறது. தாதுக்களும், உப்பும் மாடுகளுக்குத் தேவை. உப்புச் சத்து குறைந்துபோனால், மாடுகள் சுவர்களில் உரசும். சிறுநீரை விரும்பிக் குடிக்கும்.

இதைத் தவிர்க்க மாடுகளுக்கு உப்பைத் தீவனத்தில் சேர்க்க வேண்டும். இந்த உப்பை மாடுகளுக்குத் தர, நமது நாட்டு தேசிய ஆராய்ச்சி நிறுவனம். "உப்புக் கட்டி" (Cattle lick) ஒன்றைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உப்புக் கட்டியைப் பால் மாடுகளுக்கு எதிரே கட்டித் தொங்க விட்டு விட்டால் பால்மாடுகள் அதை நக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உப்புக்கட்டி குன்றக்குடி பால் உற்பத்தி சங்கத்தில் வியாபார ரீதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு பால் மாட்டுக்கு நாள்தோறும் சராசரி 13 முதல் 15 கிலோ பசும்புல், 9 முதல் 10 கிலோ இலை, 2 கிலோ வைக்கோல் உணவாக வழங்கவேண்டும்.