பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனநாயக முறையில் பொருளாதா முன்னேற்றம் காண்பதில் பகை வராது. வன்முறைக்கு அதில் வழியில்லை. அமைதியான சகோதர அன்பின் அடிப்படையில் எளிதாகப் பொருளாதார முன்னேற்றம் காணக் கூட்டுறவு துணை செய்யும்.

ஆதிக்கம், இலாபம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் சிரத்தை உள்ளூர முரண்பாடுடையது. இலாபம், ஆதிக்கம் இவற்றில் நாட்டமுடையோர் இலாபத்திற்குத் தரும் முதன்மையை எப்போதும் அன்புக்கும், உறவுக்கும் தரமாட்டார்கள். எவரையும் எப்படியும் தன்னுடைய இலாபத்திற்காகச் சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக் கொள்வர்.

ஆனால், அவர்கள் மற்றவர்களுக்கு உபயோகப்பட மாட்டார்கள். உள்ளூர முரண்பாடான சிந்தனைகளைக் கொண்டிராத மனிதர்கள் அடங்கிய அமைப்புக்களில் தான், கூட்டுறவு வளரமுடியும்; நிலைபெற முடியும்.

பொருளியல் இயற்றுவதில் தனியார் துறை, அரசுத் துறை அதாவது பொதுத்துறை, கலப்புப் பொருளாதார அமைப்பு, கூட்டுறவுத் துறை என அமையும். மனிதகுலத்தில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய சமுதாய அமைப்பே நமது இலட்சியம்.

சோஷலிச சமுதாய அமைப்பை - சர்வோதய சமுதாய அமைப்பை அமைக்க விரும்பினால், அதை நிறைவேற்றத் தனியார் துறை இடமளிக்காது. பொதுத்துறை இடமளிக்கும் என்ற நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது. இப்போது இந்த நம்பிக்கை குறைந்து வருகிறது.

கலப்புப் பொருளாதாரத்திற்கும் இதே கதிதான். சோஷலிச இலட்சியத்தை அடைய - சர்வோதய சமுதாயத்தை அமைக்கக் கூட்டுறவுத் துறையே துணை செய்யும். இது உறுதி.