பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

391


எதையும் பெறமுடியாது” என்று காந்தியடிகள் கூறியதை நினைவு கூர்க.

கூட்டுறவுப் பண்ணையில் இரண்டுமுறை இருக்கிறது. உரிமைக்குப் பாதகமில்லாமல், நிலத்தையே கூட்டுறவுப் பண்ணையில் ஒப்படைத்து விடுவது ஒருமுறை. இன்று நமது நாட்டு நிலப்பரப்புகளில் வரப்புக்கள் அதிகம்.

நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு குறைந்தது ஒரு ஏக்கர் - உச்ச பட்சம் பத்து ஏக்கர் என்ற அளவில் நன்செய்க் கழனிகளாகப் பிரித்து, சாகுபடி செய்யப்பெறும். மகசூல் தொகுக்கப் பெற்று, ஏக்கர் அடிப்படையில் பங்கிட்டுத் தரப்பெறும். இது முற்றாகக் கூட்டுப் பண்ணை. இந்த முறையில் பயன் மிகுதி.

பிறிதொரு முறை விவசாயிகள் கூட்டுப்பண்ணை. 1000 ஏக்கர் நிலத்தைக் குறியீட்டு எல்லையாகக் கொண்டு ஒரு விவசாயக் கூட்டுறவுப் பண்ணை அமைப்பது. இங்கு நிலம் பண்ணையில் சேரவில்லை. விவசாயிகள் மட்டுமே சேர்கிறார்கள். இந்தப் பண்ணை அமைப்பிலும் புதிய விவசாயக் கருவிகள் முதலியன கிடைக்கும். ஆனால், பங்குத் தொகைக்கு ஏற்பவே கிடைக்கும்.

விவசாயப் பொறுப்பு, விவசாயினுடையதே. விவசாயிக்கு வேலை நாள் கிடைக்கும். பல தனி முயற்சிகள் தேவைப்படும். நல்லமுறை தான். ஆனாலும் பயன் குறைவு. பல தனி முயற்சிகள், ஒரு மாபெரும் கூட்டு முயற்சிக்கு ஈடாகாது என்பதை நாம் உணரும் பொழுதே கூட்டுறவின் இன்றியமையாத் தேவையை உணர்வோம்.

நமது நாட்டின் விவசாயிகளில் 60 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் வாழ்கின்றனர். அவர்களிடம் உள்ள நிலம் மிகச் சிறிய அளவே. இந்த நிலத்தைக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கையை நடத்த இயலாது. ஆதலால், விவசாயிகள் ஆண்டுதோறும் கடன்படுகிறார்கள்.