பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

435


நெறி. ஆன்மிகம் பகுத்தறிவுக்குப் புறம்பானதல்ல; ஆன்மிகம் ஞானம்; ஆன்மிகம் உலகந்தழிஇயது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே”

என்றார் தாயுமானார். இதுவே ஆன்மிகத்தின் குரல். இந்த குரல் இன்று இந்தியாவிலேயே ஒலிக்கவில்லை. தமிழகத்திலேயே ஒலிக்கவில்லை. நாளும் திருக் கோயில்கள் பெருகி வளர்கின்றன; திருவிழாக்கள் நடக்கின்றன; குட முழுக்கு விழாக்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மனிதநேயம், தாழ்வெனும் தன்மை நோக்கிச் சமயம் சாரும் இயல்பைத் தந்தனவா? வறுமை, சிறுமைகளிலிருந்து தப்ப வழி வகை கற்றுக் கொடுத்ததா?

மானுடப்பதம் தந்து வாழ்வளித்த வள்ளற்பெருமானாகிய இறைவனிடமே இரவலனாகத்தானே மனிதன் செல்கின்றான்? திருக்கோயிலிலும் போட்டா போட்டிகள்! மரியாதைகள்! சாதிப்புன்மைகள்! பணத்தின் திருவிளையாடல்கள்!

எங்கே பழங்காலத் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஆன்மிகம்? நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மிகம் எங்கே? சரா சரங்கள் எல்லாம் சிவம் பெருக்கிய சீலம் எங்கே? "எந்நாட்டவர்க்கும் இறைவா" என்ற உலகப் பொதுமை தழுவிய மாணிக்கவாசகரின் ஆன்மிகம் எங்கே? “தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை" என்றவாறு தொண்டு நெறியில் வளர்ந்த ஆன்மிகம் எங்கே?

"பலர் வைகுந்தத்திற்குப் போக நான் நரகத்திற்குப் போகச் சித்தமாயுள்ளேன்” என்று மதில் மேல் ஏறி, இறைவன் நாமத்தை எடுத்து ஓதிய இராமனுசரின் ஆன்மிகம் எங்கே? "சேர வாரும் செகத்திரே" என்று, வேறுபாடின்றி அனை வரையும் அழைத்த ஆன்மிகம் எங்கு போயிற்று? தேடுங்கள்!