பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆன்மாவின் வழி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்? எவ்வுயிரும் தம்முயிர் போல் போற்றும் பெருநெறி கடைப்பிடித்து ஒழுகுங்கள் ! வல்லார்க்கும், வல்லமை இல்லாதாருக்கும், ஒரு சேர வாழ்வளியுங்கள்! உயிர்க்குலம். திருக்குலம் வாழ, வளரத் தொண்டு செய்யுங்கள்! இந்த மண்ணுலகத்திலேயே விண்ணுலகத்தைக் காணுங்கள்!

ஆன்மிகம் சமுதாயத்தைக் கூட்டுவிக்கும். ஆன்மிகம் சமுதாய மேம்பாட்டுக்குத் துணை செய்யும்! கடவுளை நம்பு! பிரார்த்தனை செய்! கடவுளிடம் சர்வ வல்லமையைத் தந்தருளும்படி கேட்டுக்கொள்! ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள் சமாதானத்தின் காவலர்கள். ஆன்மிகவாதிகள் சமநிலை காண்பவர்கள், எல்லோரையும் வாழவைக்கும் ஆன்மிகம் வளர்க! வாழ்க! ஆன்மிகத்தில் வளர்ந்து சமுதாய மேம்பாட்டைக் காண்போமாக!

உடலுக்கு வலிமை; ஆன்மாவுக்குத் துணிவு. உடலில் நோயின்மை; ஆன்மாவில் குற்றமின்மை. உடலுக்கு ஒழுங்குகள்; ஆன்மாவுக்கு ஒழுக்கம். உடலுக்குத் திறமை; ஆன்மாவுக்கு அறிவு. உடலுக்கு உணவு, ஆன்மாவுக்கு பக்தி, உடல் உழைப்பு மக்களுக்கு; ஆன்மாவின் உழைப்பு கடவுளுக்கு. உடலுக்குத் தனிமை, ஆன்மாவுக்கு மக்கள் திரளுடன் கூடுதல். உடலுக்குச் சுயநலம், ஆன்மாவுக்குப் பிறர் நலம் - என்பன இயற்கையில் அமைந்த நியதிகள். இவற்றில் பல உடன்பட்டவை.

வலிமை-துணிவு, நலம்-குற்றமின்மை, ஒழுங்கு-ஒழுக்கம்; திறமை-அறிவு; மக்களுக்கு-கடவுளுக்கு இவை உடன்பாடுடையன. ஆனால் உடல் பெரும்பாலும் சுயநலத்தையே நாடும். நல்ல ஆன்மா பிறர் நலத்தையே போற்றும். உடல் பெரும்பாலும் ஆன்மாவை ஆட்டிப் படைத்துத் தனது ஆதிக்கத்திற்குள் வைத்துக்கொள்ள ஆசைப்படும். ஆன்மாவுக்கு அடங்கி நடக்கும் உடலே நல்லது. ஆன்மாவின் வழி வாழ்தலே வாழ்க்கை.