பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



விலங்குகள், பறவைகள் துணையின்றி மனிதன் வாழ்தல் இயலாது. கால்நடைகள் செல்வம். கால்நடை வளர்த்தல் பன்முகப் பயன்தரும் தொழில். பால் மாடுகள் நமக்குப் பூரண சத்துணவாக விளங்கும் பாலைத் தருகின்றன. நிலத்திற்கு உரமளிக்கின்றன. ஆதலால் வீடுகள் தோறும் பால்மாடுகள் வளர்த்து பாலும், மோரும் உண்டு வளமாக, வலிமையாக வாழ்வோமாக!

மானுட வாழ்க்கையின் அடிப்படை, மானுட வாழ்க்கையின் இயக்கம் எல்லாம் பொருளாதார அடிப்படைதான். அல்லது பொருளாதாரமேதான். ஒரு சிலர், கருத்தே உலகை இயக்குகிறது என்பர். கருத்து இந்த உலகத்தை இயக்குவதாயின் ஆன்மிக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். உலகத்தில் மனிதன் சிந்திக்கத் தொடங்கி பல நூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

உலகத்தில் எந்த நிலையில் தோன்றிய எந்த கருத்தும் உலகத்தை வென்று விளங்கவில்லை. ஆனால் பொருளாதாரம் இயக்கி வந்திருக்கிறது. பண மதிப்பீட்டுச் சமுதாயம் விருப்பத்தக்கதல்ல என்று எவ்வளவு எடுத்துக் கூறினும் இன்னும் எடுபடவில்லை. நாட்டிற்கு நலம் செய்யும் வாய்ப்புக்களை நல்லூழால் பெற்றவர்கள் முதல் துறவியர் வரை பணமே இயக்குகிறது. ஏன்? திருக்கோயிலில் கடவுள் எழுந்தருளச் செய்யும் பொழுதுகூட பொற்காசுகள் போடு கின்றோம். அதனால்தான் மாமுனிவர் காரல்மார்க்ஸ் இந்தச் சமுதாய இயக்கத்திற்குப் பொருளே முதல் என்றார்.

நமது திருவள்ளுவரும் "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றார். "செய்க பொருளை" என்றார். ஆனால் பொருள் செய்யாமல், பொருள் செய்யும் முயற்சியில் முழு அக்கறையுடன் ஈடுபடாமல், அதிர்ஷ்டத்தை நம்புகின்றோம். லாட்டரிச்சீட்டை நம்புகின்றோம். இது தவறு. போகும் வழியும் அல்ல.

நமது நாட்டு மக்களின் வறுமைக்கு வயது குறைந்தது இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகள் இருக்கலாம். ஆனால்