பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வந்துள்ளது. நம்முன் மதுரைப் பெருங்கோயில், வைகை நீர்த்தேக்கம், இவையெல்லாம் உழைப்பின் சிறப்பையே போதிக்கின்றன! உழைப்பு வாழ்வதற்கு இன்றியமையாதது.

உழைக்காது, அல்லது முற்றாக உழைக்காது உண்பவர்கள் சோம்பேறிகள்; கொள்ளைக்காரர்கள் உழைத்து உண்பதே உயர்வு. அறிவறிந்த ஆள்வினை சார்ந்த வாழ்க்கையை நடத்துவோமாக! உழைப்பில் இன்பம், இடையீடு இல்லாத உழைப்பில் இன்பம், பிறருக்கென உழைப்பதில் இன்பம் காண்போமாக!

மனிதனின் வரலாற்றுக்கு வளர்ச்சி தேவை! மாற்றங்கள் தேவை! ஓடிக்கொண்டே உள்ள ஆறுகள் பயன்படும் தீர்த்தம் எனப்படும். தேங்கிக் கிடக்கும் குட்டை நீர் பயன்படாது - நோய்களைத்தான் தரும். அதுபோல, வளர்ச்சியையும், மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ளாத மனிதர்கள், மனிதகுலம் முன்னேற முடியாது; மேம்பாடு அடைய முடியாது.

பழக்கங்கள், வழக்கங்கள் என்ற சால் வழியே செல்லாது. பழக்கங்கள் தவிரப் பழகுமின்! மனிதனுக்கு வாய்க்கும் எந்த ஒரு துன்பமும் இயற்கையுமன்று நியதியுமன்று. இவையனைத்தும் மனிதனின், மனித குலத்தின் பிழைகளால் நேர்பவையே! பிழைகளைத் தவிர்த்துப் பழகுமின்!

"யாரொடும் பகை வேண்டாம்” என்றான் கம்பன், சொல் மூன்று. பொருள் பெரிது. "யாரொடும்" - உடன் பாடிலாதவரிடம் கூடப் பகை கொள்ளவேண்டாம். பகை இல்லையேல் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது. நாமும் பகையின்றி, பண்பு பாராட்டி, உறவு கொண்டு வாழ்வோம்! யாரோடும் உறவு! எவரோடும் ஒப்புரவு! இவை நமது வாழ்க்கை நெறிகளாகட்டும்! பழமையின் சாரம் ஏற்போம்! பழமை வித்து!