பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

459


வீட்டிலும் புத்தக நிலையத்திலும் இருக்க வேண்டிய சிறந்த நூல் இது.

சென்னை-17

அன்பன்,
கண்ணதாசன்.


அணிந்துரை

(குறட் செல்வம்)

குருமகா சந்நிதானம் சீலத்திரு

ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.


'குறட் செல்வம்' எனப் பெயருடைய தமிழுரைச் செய்யுள், திருவள்ளுவர் அருளிய பாச் செய்யுளை ஆராய்ந்தெழுதியதாகும். நாற்பத்தேழு தலைப்பில் குடிமை, ஊழ், மொழியுறவு, மக்கள். அறம், பொருள். இன்பம், வீடு முதலிய பல பொருள் குறித்த நுண்பொருட் பெருந் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாய் விளங்கிக் கற்போர் அறியாமையைக் களைந்து, மெய்ப் பேரறிவை வளர்ப்பதாக உள்ளது இச் செந்தமிழ்ப் பனுவல்.

இதன் ஆசிரியர் குன்றக்குடி அடிகளார் என வழங்க விளங்கும் திருவண்ணாமலை ஆதின குருமகா சந்நிதானம் சிலத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், மதி நுட்பம் நூலோடு உடையார்: நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்; சொற்பொழிவில் வல்ல பொருட்பொழிலாளர்; பற்பல பனுவல் எழுதிய ஆசிரியர், அவர்கள் சிலத்தை அறிந்து கொள்ள விழையும் அன்பர் அனைவரும் இதில் 34 ஆவது தலைப்பின் (பக்கம் 117) முடிவுரையை நோக்குதல் இன்றியமையாதது.

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாவது யாது! அதைத் தங்களது கடனாகக் கொண்டு உலகிற்கு ஆற்றும் நெறிவழுவாத அவர்களே இன்ன சீரிய நூல் ஆக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் நீடினிது வாழ்க, இன்ப அன்பாகிய சிவானுபூதியில் திளைக்க.