பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

463



5. புனித நெறி


1973

மதிப்புரை


(கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்)

கலைவாணியின் அழகிய மலராக-புனித நெறியாக இந்நூல் வெளிவருகின்றது. தமிழ்த்திரு சீனி, நாவுக்கரசர் இந்நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கின்றார்.

குன்றக்குடி முருகன் திருத்தலம்; இங்கே வீரச் செம்மல்களான மருது சகோதரர் எத்தனையோ திருப்பணிகளைச் செய்தனர். இந்தக் "குன்றின் வளரும் அருவியில்லையே என்று அவ்வீரர் அந்தக் காலம் வருந்தினர்" "என்றும் பொழியும் தமிழின் அருவி" என்றொரு புலவர் பெரிய மருது மகிழப் பாடினார். இன்று குன்றக்குடியில் சைவத் திருக்களைத் தேவார திருவாசக உருக்களைக் கொண்ட தமிழருவி மகிழ்ச்சியால் விம்மித் ததும்பி அலைவீசிப் பாய்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்த அருவி முழக்கம் கோயில் வழிபாடுகளில் முழங்குகிறது; மேடைகளில் வீறிடுகிறது. தமிழகம், இலங்கை, மலேயா நாடுகளிலெல்லாம் "வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க முரசு கொட்டுகிறது: அரசியல் மன்றங்களில் ஆர்வக் குரலெடுத்து அருள் விழிப்பைத் தருகின்றது."

இத்தகு தமிழருவியே தவத்திரு குன்றக்குடி அடிகள் ஆவார். அவர் பேச்சில் தமிழின் இனிமையும் காலத்திற்கேற்ற புதிய சிந்தனையும் புரட்சிக் கருத்துக்களும், மேன்மை கொள் சைவ நீதியும் ஒப்பனையும், கற்பனையும் செம்மை கொண்டு களிநடம் புரிகின்றன. சொற்கள் உள்ளத்திலிருந்து வெள்ளமாகப் பொழிகின்றன.