பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


சமயவியல், அரசியல் ஆகிய முத்தலைப்புகளில் அவர்தம் சொற்பொழிவுகள் அமைந்துள்ளன.

தவத்திரு அடிகளார் தமிழுக்கும், சைவத்திற்கும் ஆற்றி வரும் தொண்டுகள் அளப்பரிய. தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் அவர் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். ஆழந்த சிந்தனை, பரந்த நூலறிவு, சித்தாந்தப் பின்னணி, சொல்வன்மை முதலியன அடிகளாரிடம் அமைந்துள்ள பாங்கு வியத்தற்கு உரியது. சமுதாயத்தின் மீது பாசமும், நேசமும் கொண்டு பல்லாற்றானும் பணியாற்றிவரும் அடிகளாரைச் சமுதாய முனிவர் என்றே கூறலாம்.

எழுத்திலும், பேச்சிலும், அடிகளார் தமக்கெனத் தனிநடை வகுத்துக் கொண்டவர். பொருள் ஆழமும், சொற் செம்மையும், ஆராய்ச்சி வளமும் அவர்தம் எழுத்துக்களில் மிளிரக் காணலாம்.

வாழ்வியல் என்ற முதற் சொற்பொழிவில் இல் வாழ்க்கை என்னும் அதிகாரத்துள் வரும் "துறந்தார்க்கும்” எனத் தொடங்கும் குறட்பாவில் அமைந்துள்ள "இறந்தார்க்கும்” என்ற சொற்கு, அவர்தரும் விளக்கம். ஆய்வுக்கு உரியது. தனக்கென வாழாது, பிறர்க்கென வாழ்ந்து, குறிக்கோள் ஒன்றை நோக்கிப் பயணம் செய்து, அதனை எய்தும் வகையால் இறந்து பட்டவர்தம் குறிக்கோளைத் தொடர்ந்து சென்று நிறைவு செய்தல், இறந்தார்க்கு இல்லறத்தார் ஆற்றும் துணையாகும் என்பது அடிகளார் கருத்து. அன்றியும், தம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும், உரியன செய்து வைக்காமல் சமுதாயப் பணி ஆற்றுங்கால் இறந்து பட்டவர்தம் குடும்பத்தினரை வளர்த்துப் பாதுகாத்தலும், இல்லறத்தார் கடமையாகும் என்பர் அவர். இவ்வாறு,துணிந்து சிந்தித்துப் பிறரையும் சிந்திக்கத்துாண்டும் ஆற்றல், அவரது தனிச் சிறப்பாகும்.