பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

483


கூறிப் பொருளிது என்ற பொய்யில் புலவரே இந்நூல் ஆசிரியர்.

ஆளுதல், ஆளப்பெறுதல் என்பன இருவேறு செயல்கள். வேறுபாடுகளை இணைக்கும் ஒருமைப்பாடு என்பது அந்நியமன்று; வேறுபாடுகளிலேயே உள்ளார்ந்து கிடப்பது. வேறுபாடுகளில் அந்நியத் தன்மை புக இடம் கொடுத்தால் பிரிவினைப்படுத்தப் பெற்ற ஒட்டாநிலைகள் ஆதிக்கம் பெற்றுவிடும். இது சுதந்திரம் தந்த வரலாற்றுப் பாடம். இந்திய விடுதலை முழக்கம் அடிகளின் இளமைக் காலத் திருப்புமுனையாதலின், நூலின் உள்நின்ற தலைப்பு நான்கனுள் (சேக்கிழார் காட்டும் சமுதாயம், சமய இலக்கியங்கள், சித்தாந்தச் செந்நெறி, சமய இலக்கியங்களில் அறநெறி) இரண்டாவது தலைப்பே-நான்கனுள் நன்றே ஆளும் நிலை பெறுகிறது. அந்நியமிலாமை என்பது ஒருமைப்பாட்டு நியதி. அந்நியமிலாமையின் அரன்கழல் செலும் என்பது சித்தாந்தச் செந்நெறி.

அன்றாலின் கீழிருந்து அறமுதல் நாற்பொருளை வல்லார்கள் நால்வர்க்கும் வழங்கிய பரம்பொருளே குன்றைக் குருமணியென மானிடச் சட்டை தாங்கி, நாற் பொருள் பயக்கும் ஒருநடைத் திருவளர் இந்நூலை உலகுய்ய அருளியது என இந்நூலை ஆராதிக்கலாம். ஏனெனில், ஆராதிக்கும் மரபுநெறியில் மாறாதவன் யான். ஆனால், அடிகளை ஆராதனைப் பொருளாக ஆக்குவதைவிட, விமரிசனப் பொருளாகவே கடந்த 27 ஆண்டுகளாக அமைத்துச் செயல்பட்டுவிட்டேன். தனிவழிச் சிந்தனைக் கோட்டையைத் தகர்த்தெறிந்து கடுமையான விமரிசனத்தையே வாழ்வுப் பாதையாக்கிக் களங்கண்டு, தனிநின்று களங்கொண்டு, பரணி கொண்ட தமிழ் மாமுனிவர், மக்களாய்ப் பிறந்தார் அனைவர்க்கும் சமயத் தலைவராய் இவர் ஒருவரைத்தான் வரலாறு படைத்துக் கொடுத்திருக்கிறது. எவ்வாறு?