பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

519



மாணச் சிறந்ததொரு வாழ்க்கைச் சமுதாயம்
படைக்கத் துணிந்தேன் நான் பாதையிலே காணும்
தடைக் கற்கள் யாவும் தகர்க்கும் வலிவுடையேன்

என அண்மைக்கால எழுத்ததாளர்கள் வரை கவிதை, புதினம் எனப் பல துறைகளில் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தூன்றப்பட்ட வகைகளைச் சுவையான பாடல்களால் விளக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. 'மதம் சொல்லும் மந்திரங்கள்' என்னும் பொழிவு, நமக்கு விழிப்புணர்வூட்டி வழிகாட்ட வல்லது.

சீனச் சிந்தனையாளர்களில் கன்பியூசியசை அறிந்திருக்கும் நமக்கெல்லாம், சடங்குகளை எதிர்த்த சீன நாட்டு 'மோதி' என்னும் பேரறிஞரையும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களையும், இன்று நம்முடன் வாழும் அறிவியல் அறிஞர்களையும் வாழ்வியற் கவிஞர்களையும் இந்நூல் அறிமுகப்படுத்தும் பாங்கும் பாராட்டுக்குரியது. பிறநாட்டு நல்லறிஞர் ஒருவரின் பண்புநலன் பற்றி அறிய வைத்தும் உலக சமுதாய மறுமலர்ச்சிக்கான கவினுறு கருத்துப் புதையலை அளித்ததருளி செயலாற்றும் நூலாசிரியர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் மக்கள் சமுதாயத்தின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.

நூல் முழுதும் கருத்துமணிக் கோவையாய் கவிதை நடையாய் காலக் கண்ணாடியாய் மிளிர்கிறது.

நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். மேலும் பல நூல்களைப் பதிப்பித்தும் படைத்தும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

த. பெரியாண்டவன்

சென்னை
19-8-92