பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

524

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


ஒழுக்க நெறியே கற்பு என்று அருமையாக விளக்கம் தருகிறார்.

அடிகளார் காவி உடை அணிந்த துறவிதான். மனித இயல்புகளைப் புரிந்து கொண்டு கற்புக்கு என்ன அற்புதமான இலக்கணம் வகுக்கிறார் என்பதைக் காண தமிழ் உள்ளங்கள் பூரிக்கும். மகிழ்ச்சி அடையும்.

சிலப்பதிகாரம் வலியுறுத்தும் மூன்றாவது நெறி "ஊழ் வினை உருத்து ஊட்டும்” ஊழ் வலிமை அதன் பயனைத் தந்தே தீரும். ஊழ் என்றால் என்ன? தவத்திரு அடிகளாரின் கருத்துக்களின் நுட்பம், பொலிவு, புதுமை இவை அனைத்தும் இங்கே பார்க்கலாம்.

புலன்கள், பொறிகளின் வாயிலாகச் செயற்பாட்டுக்கும் பயனுக்கும் வருவது ஊழ். இது தவிர்க்க முடியாத இயற்கை விதி, நியதி, அறத்தின் செயற்பாடு.

நேற்றையை வாழ்வின் காரணமாக இன்றைய வாழ்க்கைக்கு நமக்கு ஏற்படும் விளைவுகள். இதுதான் ஊழ். நாம் செய்த வினைகளால் ஏற்படும் விழைவுகளை நாம் அனுபவிக்கத்தானே வேண்டும். இதுதான் ஊழ் என்று விளக்கும் அடிகளார், இதனை மனிதன் எதிர்த்து போராடலாம். வெற்றியும் அடையலாம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

கோவலன் பிணத்தைக் கொலையுண்ட இடத்தில் கண்ட கண்ணகி நீதி கேட்க பாண்டியனின் அவைக்களத்தை நோக்கி நடக்கிறாள். அப்பொழுது கண்ணகி "பெண்டிரும் உண்டு கொல்" "சான்றோரும் உண்டு கொல்" "தெய்வமும் உண்டு கொல்" என்று கூறி நீதி கேட்கிறாள். "தெய்வமும் உண்டு கொல்” என்ற கண்ணகியின் கூற்றுக்குத் தவத்திரு அடிகளாரின் விளக்கம், எங்களைப் போன்றவர்களின் மனதைத் தொடும் பகுதி.