பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

526

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


மறுமலர்ச்சி இலக்கியங்கள்" என்னும் அழகான நூலாக கலைவாணி வெளியிட்டுள்ளது.

சமுதாய மறுமலர்ச்சி என்றால் என்ன என்பதைத் தவத்திரு அடிகளார் அவர்கள் சங்கப் பாடல்களையும், திருக் குறளையும் எடுத்துக்காட்டி விளக்கும் திறன் மிகவும் அருமையானது.

திருக்குறள் முழுக்க முழுக்க மறுமலர்ச்சி இயக்க படைப்புக் கருவியாகும் (பக்.12). அடிகளார் அவர்களின் எண்ணவோட்டம் பாராட்டத்தக்கது. சமுதாய மறு மலர்ச்சிக்குப் பாடுபட்ட, கவிஞர்கள், புதின ஆசிரியர்கள் சிலரை நினைவு கூர்ந்து விளக்கும் திறன் பரந்து விரிந்த நூலறிவாற்றலைத் தெற்றெனக் காட்டுகிறது.

ஆன்மிகம், சமுதாயம், இலக்கியம், அரசியல் இன்ன பிற துறைகளிலெல்லாம் புரட்சிகரமான அறிவியல் கருத்துக்கள் பயன் தரும் வகையில் செயலாற்றி அருளும் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவர்களுக்கு மக்கட் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

பாரத ஒருமைப்பாட்டிற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் புகழ் சேர்க்கும் படைப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் நமது நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்கள்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இலக்கணமாகத் திகழும் தவத்திரு அடிகளார் அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

திருக்குறளார்

சென்னை
28-12-93