பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

534

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



டாக்டர். கி. வேங்கடசுப்பிரமணியன்
முன்னை துணைவேந்தர்
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

மதிப்புரை
(அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)


அருமை நண்பர் தமிழன்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு தலைமையேற்றுள்ள கலைவாணி புத்தகாலயம் ஒரு குன்றக்குடி சுரங்கம். தமிழகம் கண்ட தலையாய இலக்கிய முனிவர் அமரர் தவத்திரு குன்றக்குடி மகாசந்நிதானம் அவர்கள். தவத்திரு அடிகளார் ஒரு அற்புதத் துறவி மட்டுமல்ல தெய்வத் தமிழைப் பரப்பிய நால்வருடன் கூடச் சேர்த்து ஐந்தாமவராக வைத்து எண்ணப்படக்கூடிய பேரறிஞர் ஆவார்கள். அவரது நாற்பதுக்கும் மேற்பட்ட நூல் களை வெளியிட்டதின் பயனாகக் கலைவாணி புத்தகாலயம், பெரும் தமிழ்ப் பணி செய்துள்ளது.

இப்போது வெளி வரும் அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர் என்னும் இந்நன்னூல் அடிகளாரின் சிவநெறிப் பற்றுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அடிகளாரின், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக முத்துகணேசனார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளைத் தாங்கியுள்ள நூல் இது.

பன்னிரு திருமுறைகளில் 4,5,6-ம் திருமுறைகளை அருளிச் செய்த அப்பர் பெருமான் பெருமைகளைக் குன்றக்குடி மகாசந்நிதானம் எழுதும்போது அப்பொன் னெழுத்துக்கள் நம் மனத்தைத் தொடுகின்றன.

நம்பியாரூரர் வரலாற்றை எழுதும் அடிகளாரின் தமிழ் நடை நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. வன் றொண்டர் புராணம் இது.