பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

542

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


மக்களின் கனவுகளை நனவாக்கிய நற்றமிழ் முனிவரின் வரலாறு இது.

கருவிலேயே அமைந்த திரு என்பதைப் போல மனித நேயம் அவர்களின் இளமைக் குருதியில் கலந்த ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. அரங்கநாதனாக அவர்கள் அவதரித்த காலத்திலேயே சமூகத் தொண்டும் இறைத் தொண்டும் பிரிக்க முடியாதவாறு ஆவியில் கலந்து இருந்திருக்கின்றது. துர்நாற்றம் பிடித்த குளத்தைத் துய்மைப்படுத்த எடுத்த முயற்சி, வழிபாடு இல்லாத ஆலயத்தில் ஊர் போற்றப் பூஜை ஏற்படுத்தியது ஆகியவை சமய சமூக உணர்வு குருதியில் கலந்தது என்பதற்கு உரிய சான்றுகள்.

அரங்கநாதனாகத் திருமடத்துப் பணியில் சேர்ந்தது அகிலத்தில் ஒரு மாபெரும் வரலாறு படைக்க நிகழ்ந்திட்ட திருப்புமுனையாகும். திருமடத்துப் பணியில் இணைவது பொன்னுக்காக பொருளுக்காக அல்ல! இலட்சயத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு இயக்கங்களில் பணியாற்று கின்ற இலட்சிய வீரர்களின் பணியைப் போன்றது! எல்லாருக்கும் இந்த நற்பேறு வாய்த்திடுவதில்லை! நம் வாழ் விலும் கல்லூரிப் படிக்கட்டை விட்டு இறங்கியதும் ஏற்றுச் செய்த பணி திருமடத்தின் பணிதான்! அதுவே நம்மை ஆயுட்காலம் முழுவதும் அன்பர் பணி செய்ய ஆட்படுத்தி யிருக்கிறது!

தருமபுரம் திருமடத்தில் அரங்கநாதனாக அலுவலகப் பணியில் ஈடுபட்டவர்கள் கந்தசாமித் தம்பிரான் எனும் திரு நாமம் பூண்டு துறவியானதுதான் திருவருள் காட்டிய பெரும் பேறு. சகல உறவுகளையும் சுற்றத்தையும் துறந்து துறவுப் பாதைக்கு அடியெடுத்து வைப்பதுதான் மிகப் பெரிய சாதனையாகும்! வைராக்கியத்தில் பலவகை சொல்வர். ஆனால் துறவு வாழ்க்கையில் வைராக்கியம் இமைப் பொழுதும் சோராது இருக்க வேண்டும்.