பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

81


இது உண்மையா, இல்லையா? சென்ற காலத்தில் தலைமுறை தோறும் சாதிகளை எதிர்க்கும் உணர்வு இருந்தது. இந்தத் தலைமுறையிலோ, சாதிகளைக் காப்பாற்றும் உணர்வு நாளும் வளர்ந்து வருகிறது. ஏன்? அரசின் செயல்முறைகள் சாதி உணர்வுகளைக் கெட்டிப் படுத்துகின்றன. நமது நாட்டில் வறுமை-சென்ற காலத்திலும் இருந்திருக்கிறது. ஆயினும் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்து வந்துள்ள இந்தத் தலைமுறையிலும், நாமே நம்மை ஆளும் காலத்திலும் சென்ற தலைமுறையில் இருந்ததைவிட வறுமை வளர்ந்திருக்கிறது. ஏன்? தாயுமானாரின் சமய சமரசமும், வள்ளலாரின் சமரச சன்மார்க்கமும் உலாவிய நாட்டில் மதச் சண்டைகள், கலவரங்கள்!

நமது தலைமுறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு கடுமையானது. இந்தப் பின்னடைவை, ஈடுசெய்து முன்னோக்கிச் செல்லத் தவறினால் வரலாறு நம்மைப் பழி தூற்றும்! சிலர் முன்னோக்கிச் செல்வதாகவும் எழுது கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. தலைக்குள் வளர்ச்சி, மாற்றம் இல்லை. தலையின் மீது அணிந்து கொள்ளும் அணிகளிலே-குல்லாக்களிலே தான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆதலால், எது முன்னேற்றம்? தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை! சரியான முன்னேற்றம் இல்லாவிடில், அடுத்து வரும் தலைமுறையினர் ஏசுவர்.

ஆதலால் விழித்துக்கொள்க! புவியை நடத்த முன் வருக! அறியாமையை எதிர்த்துப் போராடுக! வறுமைக் கோடு வேண்டாம்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும். அதற்குரிய படைப்பாற்றலைப் பெற வேண்டும். உற்பத்திப் பொருளாதாரம் இன்றைய நாட்டுக்குத் தேவை. இன்று இந்த நாட்டின் போக்கைக் கூர்ந்து கண்ணுறின் சூடு பிறக்கும்! சுரணை பிறக்கும். நாட்டின் வரலாற்றை ஆக்கரீதியில் இயக்கிடும் முனைப்பு தோன்றும். சூடாகக் குடித்தால் போதாது. நமக்கும் சூடு தேவை! போர்க்குணம் தேவை!