பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றது, பழகுவார் உடன் நின்று ஒத்துப் பழகி உயர்வினை வழங்கும் பாங்கினாலேயாகும்.

ஓர் எழுத்துக்கு இனமாகும் எழுத்து, பொருளைச் சிறப்பிக்கும்; செவிச் சுவையைக் கூட்டும். ஒரு சுவையுடைய பொருளுக்கு இனமாகும். மற்றொரு சுவைப்பொருள் பொருளின் சுவையை மேலும் கூட்டும். அதாவது, பாலுக்குத் தேன் இனம். அதுபோல ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் நட்பு அவரை உயர்த்தும் வகையதாக அமைய வேண்டும். தாழ்த்துவதாக அமையின் அது தீது, அது சிற்றினம் என்று கூறித் திருவள்ளுவர் விலக்குவார்.

இங்கு, இனம் என்ற சொல், பண்பின் வழிப்பட்ட மனிதனைக் குறிக்கிறது என்பது தெளிவு. அது போலவே திருவள்ளுவர் குலம், குடி என்ற சொற்களையும் கையாளுகிறார். வடமொழி வழக்கில் நால்வகை வருணம் பேசப் பெறுகிறது. அதாவது பிராம்மணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர். இந்த நால்வகை வருணமும் கூடக் கூர்ந்து நோக்கின் பிறப்பின் அடிப்படையில் அல்ல; தொழிலின் அடிப்படையிலேயேயாகும்.

தொழிலின் அடிப்படையில் சிறப்புத் தன்மை எல்லோருக்கும் அமையாது என்பதை சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் என்று திருவள்ளுவர் உடன்படுகிறார். ஆனால், தமிழ் வழக்கில் குலம் திரிந்ததைப்போல, இங்கும் நால்வகை வருணத்தின் பொருள் திரிந்து விட்டது. இன்று நால்வகை வருணம் பிறப்பின் அடிப்படையிலேயே வற்புறுத்தப்படுகின்றது. பண்டு, ஒரு வருணத்திலிருந்து இன்னொரு வருணத்திற்கு முறையாக வளர்ந்து உயர்த்திக் கொள்ளும் உரிமை இருந்தது. இன்று அந்த உரிமை மறுக்கப்படுகிறது.