பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

99



தேசீயத் தன்மையுடைய நூல்

யர்ந்த ஒருமைப்பாட்டை அளிக்கும் கருத்துகள் உலகில் எல்லா மொழிகளிலும் உண்டு. ஆயினும், வேற்றுமை என்பதை மறந்தும்கூடக் காட்டாது இனம், மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளைக்கடந்து பொது நிலையில் தோன்றிய நூல், மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் இல்லை. தமிழில் உள்ள திருக்குறள்தான் அத்தகைய சிறப்புடைய நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் மனிதகுல ஒருமைப்பாட்டுக்குரிய மிகச்சிறந்த நூலை இயற்றித் தந்தார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித குலத்தில் நாட்டுச் சண்டைகள், மொழிச் சண்டைகள், சமயச் சண்டைகள், இனச் சண்டைகள் மலிந்திருந்த காலம். நாட்டுப்பற்றைப் பெரிதுபடுத்தி ஒருநாடு பிறிதொரு நாட்டோடு மோதி அழிப்பதை வீரம் என்று பாராட்டிச் சண்டைகளில் வெற்றி பெறுவதற்காகக் கடவுளைக்கூடப் பிரார்த்தனை செய்தனர். அந்த மாதிரியான காலச் சூழ்நிலையில் திருக்குறள் தோன்றியது தமிழகத்தின் ஒருமைப் பாட்டுணர்வுக்கு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழகம் பழங்காலந்தொட்டே ஒருமையுணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்", "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்", "எல்லா உலகமும் ஆனாய் நீயே", "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற சொற்றொடர்கள், காலத்திற்குக் காலம் மனிதகுல ஒருமைப்பாட்டைத் தமிழகம் வற்புறுத்தியமைக்கு எடுத்துக் காட்டுகள். இங்ங்ணம் மிகச் சிறந்த ஒருமைப்பாட்டுச் சிந்தனைகள் த்மிழகத்தில் தோன்றினாலும், தமிழகத்தில் ஒருமைப்பாடு வளரவில்லை யென்பது என்னவோ உண்மை.